கொரோனா தோற்றம் குறித்து கண்டறிய நிபுணர் குழுவை பீஜிங்கிற்கு அனுப்ப சீனா அனுமதி
By: Nagaraj Thu, 09 July 2020 11:14:34 AM
கொரோனா வைரஸின் தோற்றம் குறித்து கண்டறிய உலக சுகாதார அமைப்பின் (WHO) நிபுணர்கள் குழுவை பீஜிங்கிற்கு அனுப்ப சீனா அனுமதி அளித்துள்ளது என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்த விடயம் தொடர்பாக சீன தரப்பில் ஆலோசனை இடம்பெற்ற நிலையில், நிபுணர்கள் குழுவை நாட்டுக்குள் அனுமதிப்பதற்கு ஒப்புக்கொள்வதாக சீனாவின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஷாவோ லிஜியன் (Zhao Lijian) தெரிவித்துள்ளார்.
உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம்
கண்டறியப்பட்டது. வுஹான் நகரில் உள்ள ஈரப்பதமான விலங்குகள் மற்றும்
பறவைகள் விற்பனை செய்யும் சந்தையில் இருந்து வைரஸ் பரவியதாக சீனா
தெரிவித்திருந்தது.
இந்நிலையில், வுஹானில் பரவத் தொடங்கிய வைரஸ்
தொற்று உலகம் முழுவதும் தற்போது தீவிரமாகப் பரவியுள்ள நிலையில் இந்த வைரஸ்
இயற்கையாக தோன்றவில்லை எனவும் வுஹான் உயிரியல் ஆய்வகத்தில் இருந்து பரவியது
என்றும் பெரும்பாலான நாடுகள் குற்றஞ்சாட்டின.
மேலும், உலக சுகாதார
அமைப்பிற்கு சீனா சரியான தகவல்களை அளிக்கவில்லை என்றும் இதுவொரு தொற்று
நோய் என சீனா அறிவிக்காமல் மறைத்து விட்டது எனவும் குற்றச்சாட்டு
முன்வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா வைரஸ் எப்பாடி உருவானது
என்பதைக் கண்டறிய சீனாவுக்கு நிபுணர்கள் குழுவை அனுப்பவுள்ளதாக உலக சுகாதார
அமைப்பு அண்மையில் அறிவித்தது.
எனினும், உலக சுகாதார அமைப்பின்
இந்த முடிவுக்கு சீனா எதிர்ப்புத் தெரிவித்த நிலையில் சீனாவுடன் உலக
சுகாதார அமைப்பு ஆலோசனை நடத்தியது. இந்த சூழலில் தற்போது உலக சுகாதார
அமைப்பின் நிபுணர்கள் குழுவை நாட்டுக்குள் அனுமதிக்க சீனா சம்மதம்
தெரிவித்துள்ளது.