கொரோனா நோயாளிகள் சிகிச்சையில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் சீனா
By: Karunakaran Thu, 23 July 2020 09:25:57 AM
உலகம் முழுவதும் மனித பேரழிவை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸுக்கு இதுவரை தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. இது தொடர்பான ஆராய்ச்சிகள் உலகளவில் நடந்து வருகின்றன. பிற நோய்களுக்கு வழக்கமாக தரப்படுகிற மருந்துகளையும், தொழில்நுட்பங்களையும் தற்போது கொரோனா நோயாளிகளுக்கு பயன்படுத்தி சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இந்நிலையில் சீனாவில் கொரோனா நோயாளிகளுக்கு ஆபத்தான நிலை ஏற்படும் என்பதை முன்கூட்டியே செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கணிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த ஆராய்ச்சியை குவாங்சோ சுவாச சுகாதார இன்ஸ்டிடியுட்டும், டென்சென்ட் செயற்கை நுண்ணறிவு நிறுவனமும் நடத்தியுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று நோய் ஆபத்தான கட்டத்தில் செல்லும்போது, நோயாளியின் உயிரைக் காப்பாற்றுவதில் சிக்கல்கள் எழுவதால் ஆபத்து ஏற்படப்போவதை முன்கூட்டியே கணிக்க செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தப்படுகிறது. இது மருத்துவ பண்புகளின் அடைப்படையில் ஆபத்து ஏற்படுவதை 5 அல்லது 10 அல்லது 30 நாட்களுக்குள் முன்கூட்டியே கணிக்கிறது.
நோயாளிகளின் அசாதாரணமான நிலையின் எக்ஸ்ரே இமேஜிங், வயது, சுவாச பிரச்சினை, நாள்பட்ட நோய்கள் ஆகியவற்றை இணைத்து ஆராய்ந்து ஆபத்தான நிலை ஏற்படுவதை முன்கூட்டியே கணிக்கின்றனர். இந்த வசதி அங்கு ஆன்லைனில் பொதுமக்களுக்கு இலவசமாக கிடைப்பது குறிப்பிடத்தக்கது.