கல்வான் பள்ளத்தாக்கில் சீன ராணுவம் நடத்தியது திட்டமிட்ட தாக்குதல் - ராகுல்காந்தி
By: Karunakaran Sat, 20 June 2020 1:18:18 PM
கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த 15-ஆம் தேதி இந்திய-சீன ராணுவத்தினரிடையே தாக்குதல் நடைபெற்றது. இந்த தாக்குதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். இந்த மோதல் காரணமாக அங்கு பதற்றம் நிலவி வருகிறது. இந்நிலையில் இந்த மோதல் குறித்து எதிர்க்கட்சியினர் மற்றும் பல்வேறு கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
சீனாவின் இந்த அத்துமீறிய தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்து வருகின்றனர். இந்நிலையில் இதுகுறித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் சீன ராணுவம் திட்டமிட்டு தாக்குதல் நடத்தியதாக கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ராகுல்காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், இப்போது எல்லாம் தெளிவாகி விட்டது. கல்வான் பள்ளத்தாக்கில் சீன ராணுவம் நடத்தியது, முன்கூட்டியே திட்டமிட்ட தாக்குதல் என்று தெரிவித்துள்ளார். இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் அவர், எந்த பிரச்சினையும் இல்லை என்று இந்தியா மறுத்து வந்தது. ஆனால், அதற்கான விலையை பலியான வீரர்கள் கொடுத்துள்ளனர் என்று கூறி, சீன ராணுவம் திட்டமிட்டு தாக்குதல் நடத்தியதாக ராணுவ இணை மந்திரி ஸ்ரீபாத் நாயக் கூறியது பற்றிய பத்திரிகை செய்தியை இணைத்து வெளியிட்டுள்ளார்.