மூன்று நாட்கள் நடந்த பேச்சுவார்த்தைக்கு பின் இந்திய வீரர்களை விடுவித்த சீன ராணுவம்
By: Karunakaran Fri, 19 June 2020 2:37:11 PM
கடந்த 15-ஆம் தேதி இரவு லடாக் எல்லையின் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் சீன ராணுவம் இந்திய ராணுவம் மீது தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலுக்கு இந்திய ராணுவமும் பதில் தாக்குதல் நடத்தியது. இந்தியா-சீன படைகளுக்கிடையே ஏற்பட்ட மோதலில் இந்திய தரப்பில் இதுவரை 20 வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளனர். மேலும் 15க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
சீனா தரப்பில் 40க்கும் மேற்பட்டோர் இறந்திருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. சீன ராணுவம் முதலில் அத்துமீறியதால் மோதல் ஏற்பட்டதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. ஆனால், இந்திய வீரர்கள் அத்துமீறியதாக சீன ராணுவமும் குற்றம்சாடடியுள்ளன. ஒருவரையொருவர் மாறி மாறி குற்றம்ச்சாட்டி வருகின்றனர். இந்த மோதலுக்கு பின் அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
பதற்றத்தை தணிக்க இரு தரப்பு அதிகாரிகளும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். கடந்த 16ம்தேதி முதல் 18-ம் தேதி வரை உயர்மட்ட அதிகாரிகள் இடையே நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையின் முடிவில், சீனாவால் சிறைப்பிடிக்கப்பட்ட 2 உயர் அதிகாரிகள் உள்பட 10 இந்திய வீரர்கள் விடுவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
விடுவிக்கப்பட்ட அனைவருக்கும் மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கு முன் இந்திய ராணுவம் வெளியிட்ட அறிக்கையில், சீனாவால் சிறைப்பிடிக்கப்பட்ட வீரர்கள் குறித்து எந்த தகவலும் இடம்பெறவில்லை. ஆனால் தற்போது சீனாவால் சிறைப்பிடிக்கப்பட்ட 10 இந்திய வீரர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது.