தடுப்பூசிகளை விரைவில் வெளியிட சீன நிறுவனங்கள் தயாராகி வருகின்றன
By: Karunakaran Mon, 07 Dec 2020 10:17:05 AM
முதன் முதலில் கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு இறுதியில் சீனாவில் தான் தோன்றியது. தற்போது உலகம் முழுவதும் பரவி மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. சீனா உலகத்துக்கு கொரோனா வைரஸ் தொற்றை வாரி வழங்கியதோடு மட்டுமல்லாமல், இப்போது அதைத் தடுப்பதற்கு தடுப்பூசி தயாரித்து சந்தையிடுவதில் முனைப்பு காட்டி வருகிறது.
இந்நிலையில் தற்போது சீனாவில் 4 நிறுவனங்கள் சார்பில் 5 தடுப்பூசிகள் உருவாக்கப்பட்டு, அவை ரஷியா, எகிப்து, மெக்சிகோ உள்பட 12-க்கு மேற்பட்ட நாடுகளில் பரிசோதிக்கப்படுகின்றன. இந்த தடுப்பூசிகளை விரைவில் வெளியிட நிறுவனங்கள் தயாராகி வருகின்றன. மாகாண அரசாங்கங்கள் தடுப்பூசிகளுக்காக ஆர்டர்களை குவித்து வருகின்றன.
இருப்பினும் சுகாதார அதிகாரிகள் எவ்வளவு சிறப்பாக செயல்படுகிறார்கள் என்றோ, நாட்டின் 140 கோடி மக்களை எவ்வாறு சென்று அடையப்போகிறார்கள் என்றோ கூறப்படவில்லை. இந்நிலையில் ஐ.நா. சபை கூட்டத்தில் பேசிய சீன வெளியுறவு மந்திரி வாங் யி, கொரோனா வைரஸ் தடுப்பூசிகளை உருவாக்கியவர்கள் சோதனைகளை விரைவுபடுத்துகின்றனர் என்று கூறினார்.
ஏற்கனவே அமெரிக்காவில் பைசர் நிறுவனம் உருவாக்கிய கொரோனா தடுப்பூசி 95 சதவீதம் வெற்றியடைந்து விட்டதால், பல்வேறு நாடுகள் அந்நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளன. இங்கிலாந்து நாடு பைசர் நிறுவன தடுப்பூசியை அமல்படுத்த ஒப்புதல் அளித்தது குறிப்பிடத்தக்கது.