சர்ச்சைகளுக்கு மத்தியில் சீன நிறுவன கொரோனா தடுப்பூசி பரிசோதனை
By: Nagaraj Thu, 12 Nov 2020 9:20:50 PM
கொரோனா தடுப்பூசி பரிசோதனை... சர்ச்சைகளுக்கு மத்தியில் பிரேசிலில் சீன நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசியின் பரிசோதனை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சீன நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி பரிசோதனைக்கு பிரேஸில் சுகாதார கட்டுப்பாட்டு அமைப்பு ‘அன்விசா’ மீண்டும் அனுமதி வழங்கியுள்ளது. பரிசோதனையில் பங்கேற்ற நபர் உயிரிழந்ததற்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டதற்கும் எந்த தொடர்பும் இல்லை எனவும் உயிரிழப்பு தற்கொலை காரணமாகவே நிகழ்ந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், சீன தடுப்பூசி பரிசோதனையை மீண்டும் தொடங்க போதுமான தகவல்கள் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் சர்ச்சைகளுக்கு மத்தியில் பிரேஸில் நாட்டில் சீன நிறுவனத்தின்
கொரோனா தடுப்பூசியின் பரிசோதனை மீண்டும் நடைபெற்று வருகிறது. உலகளவில்
கொரோனா வைரஸ் பாதிப்பில் பிரேஸில் 3ஆவது இடத்தில் உள்ளது. அந்நாட்டில் 57
இலட்சத்துக்கும் அதிகமானோருக்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
அதேபோல்,
கொரோனா உயிரிழப்புகள் பட்டியலில் உலக அளவில் இரண்டாவது இடத்தில் உள்ள
பிரேஸிலில் ஒரு இலட்சத்து 63 ஆயிரத்துக்கும் அதிகமான உயிரிழப்புகள்
பதிவாகியுள்ளன.
இதற்கிடையில், சீன மருந்து நிறுவனமான சைனோவேக்
‘கொரோனாவேக்’ என்ற தடுப்பூசியை உருவாக்கியுள்ளது. இந்த தடுப்பூசி பிரேசில்
நாட்டில் 7 மாகாணங்களில் பொதுமக்களுக்கு செலுத்தி பரிசோதிக்கப்பட்டு
வந்தது. இந்நிலையில் ‘கொரோனாவேக்’ தடுப்பூசியை மனிதர்களுக்கு செலுத்தி
சோதிக்கும் பரிசோதனையின் போது மிக மோசமான பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக
தெரிவிக்கப்பட்டது.
பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டவர்களில் ஒருவர்
உயிரிழந்து விட்டதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. இதன் காரணமாக சீன
தடுப்பூசியின் பரிசோதனையை பிரேசில் சுகாதார கட்டுப்பாட்டு அமைப்பு
‘அன்விசா’ அதிரடியாக நிறுத்தி வைத்தமை குறிப்பிடத்தக்கது.