ரயில் பாதைப்பணிகளுக்காக சீன நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட ஒப்பந்தம் ரத்து
By: Nagaraj Thu, 18 June 2020 9:08:07 PM
கான்பூர் - முகல்சராய் இடையே ரயில் பாதையில் சிக்னல் தொலைத்தொடர்பு பணிகளைச் செய்யச் சீன நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
லடாக் எல்லையில் இந்திய - சீன வீரர்கள் மோதலில் 20 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தால் இந்திய- சீன எல்லையில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இனி சீன பொருட்களை வாங்கக்கூடாது என்ற கோரிக்கை வலுவடைந்து வருகிறது.
இந்நிலையில் பஞ்சாபின் லூதியானா, மேற்குவங்கத்தின் தங்குனி இடையே சரக்குப்
போக்குவரத்துக்கென்றே தனி ரயில்பாதை அமைக்கப்பட்டு வருகிறது. இதில்
உத்தரப்பிரதேசத்தின் கான்பூர் - முகல்சராய் இடையே 417 கிலோமீட்டர்
தொலைவுக்கு சிக்னல் மற்றும் தொலைத்தொடர்பு பணிகளைச் செய்யும் ஒப்பந்தம்
சீனாவின் பெய்ஜிங் நேசனல் ரெயில்வே நிறுவனத்துக்கு வழங்கப்பட்டிருந்தது.
கடந்த
2016ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் ஒப்பந்தம் வழங்கப்பட்ட நிலையில், 4
ஆண்டுகளாக 20 விழுக்காடு பணிகளே நடந்துள்ளது. முறையாகப் பணிகளை முடிக்காத
காரணத்தால் சீன நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட 471 கோடி ரூபாய் மதிப்பிலான
ஒப்பந்தத்தை இந்திய ரயில்வே ரத்து செய்துள்ளது. இருப்பினும் லடாக் எல்லை
பிரச்னைக்கு பின்னர் இந்த ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டுள்ளதும்
குறிப்பிடத்தக்கது.