சீன அதிபர் ஜீயும், இந்திய பிரதமர் மோடியும் ஊஞ்சலாடுகிறார்கள் - ப.சிதம்பரம்
By: Karunakaran Mon, 29 June 2020 09:28:52 AM
பிரதமர் மோடியின் தனிக் கட்டுப்பாட்டில் உள்ள பிரதமரின் குடிமக்கள் உதவி மற்றும் அவசரகால சூழ்நிலைகளில் நிவாரணம் சீன நிறுவனத்திடமிருந்து கோடிக்கணக்கான ரூபாய்களை நிவாரணமாக பெற்றுள்ளது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. லடாக் மோதலுக்கு பின் சீனாவுக்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என பல்வேறு அமைப்பினர் மத்திய அரசை வலியுறுத்தி வரும் நிலையில், சீன நிறுவனத்திடமிருந்து நிவாரணம் பெற்றது சர்ச்சையை உண்டாக்கியுள்ளது.
இந்நிலையில் இதுகுறித்து முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில், 2005-ம் ஆண்டில் ராஜீவ் காந்தி அறக்கட்டளை ரூ.1 கோடியே 45 லட்சம் நன்கொடை பெற்றது தவறு என்றால், 2020-ம் ஆண்டில் சீன நிறுவனங்களிடம் இருந்து கோடிக்கணக்கான ரூபாய்களை பிரதமர் மோடியின் தனிக் கட்டுப்பாட்டில் உள்ள ‘பி.எம்.-கேர்ஸ்’ நிதியம் பெற்றதே, அது எப்படி நியாயம்? என்று பதிவிட்டுள்ளார்.
மேலும் அவர், சீனா எப்போது ஊடுருவியது? 2013, 2014, 2018, 2020-ல் ஊடுருவல் நடைபெற்றது. இந்த ஊடுருவல்களுக்கு பிறகு பிரதமர் மோடியின் கட்டுப்பாட்டில் உள்ள நிதியம் சீன நிறுவனங்களிடம் இருந்து நிதி பெற்றது மாபெரும் குற்றமல்லவா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
2020 மார்ச், ஏப்ரல் மாதங்களில் சீன நிறுவனங்கள் நிதி கொடுத்த அதே மார்ச், ஏப்ரல் மாதங்களில் சீனத் துருப்புகள் ஊடுருவுகின்றன. சீன அதிபர் ஜீயும், இந்திய பிரதமர் மோடியும் ஊஞ்சலாடுகிறார்கள், சீனத் துருப்புகள் ஊடுருவுகின்றன என்று ப.சிதம்பரம் குற்றம் சாட்டியுள்ளார்.