சீனப்படைகள் முழுவதும் வெளியேற வேண்டும்; இந்தியா வலியுறுத்தல்
By: Nagaraj Mon, 27 July 2020 11:20:03 AM
இரு நாடுகளுக்கும் இடையேயான சுமூக உறவு மற்றும் ஆரோக்கியமான சூழல் உருவாவதற்கு சீனப்படைகள் எல்லையில் முழுவதுமாக காலி செய்ய வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தி உள்ளது.
இந்தியாவின் கிழக்கு லடாக் பகுதியில் சீனாஅத்துமீறலை தொடர்ந்து இருநாட்டு ராணுவத்தினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில் இந்திய ராணுவத்தினர் 20 பேர் உயிரிழந்தனர்.
இதையடுத்து, எல்லைப்பகுதியில் சுமூக நிலையை மீட்க இந்தியா மற்றும் சீனாவின், ராணுவம் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சகம் சார்பில் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன.
இருதரப்புக்கும் இடையே இதுவரை 17 முறை நடைபெற்றுள்ள பேச்சுவார்த்தை மூலம் ஏற்பட்ட முன்னேற்றம் காரணமாக, கல்வான் பள்ளத்தாக்கு பகுதி, ரோந்து பகுதி 15 மற்றும் கிழக்கு லடாக்கில் உள்ள கோக்ரா பகுதிகளில் இந்திய மற்றும் சீனப் படைகள் முழுமையாக வாபஸ் பெறப்பட்டுள்ளன.
அதேசமயம், பாங்கோங் சோ லேக் பகுதியில் இன்னும் படைகள் வாபஸ் பெறப்படாத
நிலையில், எல்லைக் கோடு அருகே 40,000க்கும் அதிகமான சீன வீரர்கள் இன்னும்
குவிக்கப்பட்டுள்ளனர். அங்கிருந்து படைகளை பின்வாங்குவது தொடர்பாக வரும்
வாரத்தில் இருதரப்பு ராணுவ அதிகாரிகளுக்கிடையே பேச்சுவார்த்தை நடக்கும் என
எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே எல்லைப்பகுதியில் நேற்று
நடைபெற்ற, இந்திய-சீன எல்லை பிரச்னை தொடர்பான ஆலோசனை மற்றும் ஒருங்கிணைப்பு
வழிமுறைகள் கூட்டத்தில், இந்தியா சார்பில் வெளியுறவு அமைச்சகத்தைச்
சேர்ந்த கிழக்கு ஆசிய இணை செயலாளர் நவீன் ஸ்ரீவஸ்தவாவும், சீனா சார்பில்
வெளியுறவு விவகாரங்களுக்கான எல்லை மற்றும் பெருங்கடல்துறை பொது இயக்குனர்
ஹோங் லியாங்கும் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், இரு நாடுகளுக்கும்
இடையேயான சுமூக உறவு, மற்றும் ஆரோக்கியமான சூழல் உருவாவதற்கு சீனப்படைகள்
எல்லையில் முழுவதுமாக காலி செய்ய வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தி
உள்ளது.