லடாக் எல்லையில் இருந்து சீன படைகள் பின் வாங்கின
By: Karunakaran Tue, 07 July 2020 12:43:32 PM
இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே பல ஆண்டுகளாக எல்லை தகராறு நிலவி வருகிறது. இந்நிலையில் கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில் இரு தரப்பினருக்கும் இடையே ஏற்கனவே மோதல் ஏற்பட்டது. அதன்பின், கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த மாதம் 15-ந் தேதி சீன ராணுவ வீரர்கள் அத்துமீற முயன்றனர். அப்போது சீன ராணுவ வீரர்களுக்கும் இந்திய ராணுவ வீரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
இந்த மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீர மரணம் அடைந்தனர். சீன தரப்பில் 35-க்கும் மேற்பட்ட வீரர்கள் பலியாகினர். இதனால் எல்லையில் பதற்றம் நிலவியது. சீனாவின் அச்சுறுத்தலை சமாளிக்க இந்தியா படைபலத்தை அதிகரித்ததால் அங்கு போர் மூளும் அபாயம் நிலவியது.
இருப்பினும் எல்லையில் பதற்றத்தை தணிக்கும் முயற்சியில் இரு தரப்பு ராணுவ உயர் அதிகாரிகள் மற்றும் தூதரக மட்டத்தில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. கடந்த ஜூன் 30-ந் தேதி நடைபெற்ற 3-வது சுற்று பேச்சுவார்த்தையின் போது, மோதல் போக்கை விலக்கி எல்லையில் இருந்து படைகளை விலக்கிக்கொள்ள ஒப்புக்கொள்ளப்பட்டது.
இந்நிலையில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலும், சீன வெளியுறவு மந்திரி வாங் யியும் நேற்று முன்தினம் தொலைபேசியில் பேசி எல்லையில் பதற்றத்தை தணிக்க இருதரப்பும் படைகளை விலக்கிக் கொள்வது குறித்து முடிவு செய்தனர். இந்த பேச்சுவார்த்தையை தொடர்ந்து, எல்லைப் பகுதியில் இருந்து நேற்று படைகளை விலக்கும் நடவடிக்கையை சீன ராணுவம் தொடங்கியது. தற்போது, லடாக் எல்லைப் பகுதியில் கடந்த 2 மாதங்களாக நீடித்து வந்த பதற்ற நிலை முடிவுக்கு வந்தது.