டிரம்பின் ஆதரவாளர்களும், போராட்டக்காரர்களும் இடையே மோதல்
By: Karunakaran Mon, 31 Aug 2020 1:56:08 PM
அமெரிக்காவின் மினசோட்டா மாகாணம், மினியாபொலிஸ் நகரில் கடந்த மே மாதம் 25-ந் தேதி ஜார்ஜ் பிளாய்ட் என்ற கறுப்பினத்தைச் சேர்ந்தவரை போலீசார் சந்தேகத்தின் அடிப்படையில் மடக்கிப் பிடித்து அவரது கழுத்தில் காலை வைத்து பலமாக அழுத்தினர். இதனால் அவர் மூச்சுத்திணறல் ஏற்பட்டு பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் காரணமாக அங்கு மாபெரும் போராட்டம் வெடித்தது.
‘பிளாக் லைவ்ஸ் மேட்டர்’ என்கிற பெயரில் அமெரிக்கா முழுவதும் இனவெறிக்கு எதிராகவும் போலீசாரின் வன்முறையை கண்டித்தும் போராட்டங்கள் நடைபெற்றன. மேலும் இந்த சம்பவத்திற்கு நீதிகேட்டு உலகின் பல்வேறு பகுதிகளிலும் போராட்டங்கள் நடைபெற்றன. இந்நிலையில், அமெரிக்காவின் ஒரு சில மாகாணங்களில் இன்றளவும் ‘பிளாக் லைவ்ஸ் மேட்டர்’ அமைப்பினரின் போராட்டங்கள் தொடர்ந்து வருகின்றன.
ஒரேகான் மாகாணத்தின் போர்ட்லேண்ட் நகரில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஊரடங்கு உத்தரவை மீறியும், போலீசாரின் அனுமதியின்றியும் போராட்டங்கள் நடந்து வருவதால் போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தொடர்ந்து மோதல் வெடித்து வருகிறது. இந்நிலையில் ‘பிளாக் லைவ்ஸ் மேட்டர்’ அமைப்பினரின் போராட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஜனாதிபதி டிரம்ப் ஆதரவாளர்கள் போர்ட்லேண்ட் நகரில் கடந்த மூன்று வாரங்களாக பேரணி மற்றும் ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றனர்.
நேற்று முன்தினம் போர்ட்லேண்ட் நகரில் வழக்கம்போல் போராட்டத்தில் ஈடுபட்ட ‘பிளாக் லைவ்ஸ் மேட்டர்’ அமைப்பினர் அங்குள்ள போலீஸ் சங்கம் கட்டிடத்திற்கு தீ வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. டிரம்பின் ஆதரவாளர்கள் ‘பிளாக் லைவ்ஸ் மேட்டர்’ அமைப்பினரின் போராட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போர்ட்லேண்ட் நகரில் பேரணி நடத்தியபோது, போராட்டக்காரர்களுக்கும், டிரம்பின் ஆதரவாக இருக்கும் இடையே பயங்கர மோதல் வெடித்தது. மேலும் இந்த மோதல் நடந்த இடத்தில் திடீரென துப்பாக்கி சூடு நடந்தது. அப்போது, 3 முறை துப்பாக்கியால் சுடப்பட்டதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சரிந்து உயிரிழந்தார்.