- வீடு›
- செய்திகள்›
- தமிழகத்தில் நாளை (ஜூன் 17) காலை 10 மணிக்கு..... 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு
தமிழகத்தில் நாளை (ஜூன் 17) காலை 10 மணிக்கு..... 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு
By: vaithegi Thu, 16 June 2022 1:17:50 PM
தமிழகம்: தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மார்ச் மாதத்தில் தொடங்குவது வழக்கம். அதனைத்தொடர்ந்து 10ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வும், பிற வகுப்புகளுக்கான ஆண்டு இறுதித்தேர்வும் நடைபெறும்.
ஆனால், நடப்பு கல்வி ஆண்டில் பள்ளி நேரடி வகுப்புகள் கால தாமதமாக தொடங்கியதால், பொதுத் தேர்வுகள் மற்றும் இறுதித் தேர்வுகள் மே மாதம் இறுதிவரை நடைபெற்றது. இந்நிலையில் விடைத்தாள் திருத்தும் பணிகள் முடிவடைந்தது.இந்த நிலையில் திட்டமிட்டபடி நாளை 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.
அதாவது தமிழ்நாட்டில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் வரும் அரசுப்பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் மெட்ரிக் பள்ளிகளில் 10-ம் வகுப்பு படித்த மாணவர்களுக்கு கடந்த மே மாதம் பொதுத்தேர்வு நடைபெற்றது. மேலும் இத்தேர்வை சுமார் 9 லட்சம் பேர் எழுதிய 45 லட்சம் விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் பணி கடந்த 1-ம் தேதி முதல் 9-ம் தேதி வரை நடைபெற்றது.
இதையடுத்து விடைத்தாள்களை திருத்தி, மதிப்பெண்களை தொகுத்து அவற்றை தேர்வுத்துறை அதிகாரிகள் சரிபார்த்த பின், தேர்வுத்துறையின் இணையதளங்களில் பதிவேற்றும் பணி நிறைவு பெற்றுள்ளதாக அரசுத் தேர்வுகள் இயக்கம் தெரிவித்துள்ளது.
எனவே திட்டமிட்டபடி நாளை (ஜூன் 17) காலை 10 மணிக்கு www.dge.tn.gov.in இணையதளத்தில் பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்படும். மேலும் பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான ஓரிரு நாட்களிலேயே தற்காலிக மதிப்பெண் சான்றிதழை பள்ளிகள் வாயிலாக பெற்றுக்கொள்ளலாம் என்றும் அரசுத் தேர்வுகள் இயக்கம் தெரிவித்துள்ளது.
மேலும் 10-ம் வகுப்பு முடித்த மாணவர்கள் உடனடியாக 11-ம் வகுப்பில் சேர்ந்து கொள்ள வேண்டும் என்றும், நடப்பு கல்வியாண்டுக்கான 11-ம் வகுப்புகள் வரும் 27-ம் தேதி தொடங்கும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.