Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தஞ்சை சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தில் தொடங்கியது கிளஸ்டர் 2 நாள் மாநாடு

தஞ்சை சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தில் தொடங்கியது கிளஸ்டர் 2 நாள் மாநாடு

By: Nagaraj Sat, 06 May 2023 7:52:10 PM

தஞ்சை சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தில் தொடங்கியது கிளஸ்டர் 2 நாள் மாநாடு

தஞ்சாவூர்: தஞ்சாவூர் அருகே திருமலைசமுத்திரம் சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்நாடு பயோநெஸ்ட் தொகுப்பின் (கிளஸ்டர்) இரு நாள் மாநாடு நேற்று தொடங்கியது. இதில் 10 புதிய தயாரிப்புகள் அறிமுகம் செய்யப்பட்டன.

மாநாட்டை பைராக் பயோடெக் துறைக்கான தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் மேக் இன் இந்தியா வசதிப் பிரிவுத் தலைவர் மணீஷ் திவான் தொடக்கி வைத்து பயோநெஸ்ட் தொகுப்பு தொழில் வளர்ப்பகங்களின் கிளின் கிரீன் டெக், மீளுருவாக்க மருத்துவம், நோயறிதல், உணவு தர மதிப்பீடு, உதவி சாதனங்கள் தொடர்பாக 10 புதிய தயாரிப்புகளை வெளியிட்டார். பின்னர் அவர் பேசுகையில், இந்தத் தயாரிப்பு வெளியீடுகள் வெற்றிகரமானவை. தொழில் வளர்ப்பகங்களில் தமிழ்நாடு தொகுப்பின் ஒருங்கிணைந்த முயற்சிகள் பாராட்டத்தக்கவை என்றார் அவர்.

புதிய தயாரிப்புகளாக உணவு சேமிப்புக் கிடங்கில் இருப்பு வைக்கப்படும் உணவு தானியங்கள், பழங்கள், காய்கறிகளின் தரத்தைக் கண்காணிப்பதற்கான நவீன சாதனம் அறிமுகம் செய்யப்பட்டது. உணவு தானியங்கள், பழங்கள், காய்கறிகள் வீணாவதை முன்கூட்டியே அறிந்து, தடுப்பதற்கு இந்த கரும் பெரும் உதவியாக இருக்கும். உணவு தானியங்களைக் கிடங்கில் எவ்வளவு காலம் வைத்துக் கொள்ளலாம் என்பதை அறிந்து கொள்ளும் விதமாக இந்த நவீன சாதனம் தயாரிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.

இதேபோல் முதியவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான அதிநவீன சக்கர நாற்காலி அறிமுகம் செய்யப்பட்டது. இந்தச் சக்கர நாற்காலியில் செல்போன் வாயிலாக முன்னும், பின்னும் செல்லுதல், இடது, வலது புறம் திரும்புதல் போன்றவற்றை வாய்ஸ் ரெக்கார்ட்டிங் செய்து பயன்படுத்தும் விதமாக தயாரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

sastra,virtuality,patent,synthesis,cluster convention ,சாஸ்த்ரா, நிகர்நிலை, காப்புரிமை, தொகுப்பு, கிளஸ்டர் மாநாடு,

மின்னணு சாதனங்களை பேக்கிங் செய்யும்போது பயன்படுத்தப்படும் தெர்மோகோல் பொருள்களுக்கு பதிலாக விவசாயக் கழிவுகளான வைக்கோல், வெல்லப்பாகு, காளான் உள்ளிட்டவற்றைக் கொண்டு தயாரிக்கப்பட்ட தக்கை அறிமுகம் செய்யப்பட்டது. தெர்மோகோலை விட மிகவும் பாதுகாப்பான இந்தத் தக்கை மறுசுழற்சி செய்யக்கூடியவை. சுற்றுச்சூழலையும் பாதிக்காத இந்தத் தக்கை மூலம் விவசாயிகளுக்குக் கூடுதல் வருவாயும் கிடைக்கும் விதமாக தயாரிக்கப்பட்டுள்ளது. மேலும், செல்போன் மூலம் காற்று மாசுப்பாட்டை கண்டறிவதற்கான சாதனமும் அறிமுகம் செய்யப்பட்டது.

சாஸ்த்ராவின் அப்லெஸ்ட் தலைமை நிர்வாக அலுவலர் அனுராதா பேசுகையில், இந்த விழாவில் அறிமுகம் செய்யப்பட்ட தயாரிப்புகள் கோல்டன் ஜூப்ளி மகளிர் பூங்கா, வி.ஐ.டி., தானுவாஸ், சுகாதார தொழில்நுட்ப கண்டுபிடிப்பு மையம், சென்னை ஐ.ஐ.டி., தஞ்சாவூர் சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலைக்கழகம், பி.எஸ்.ஜி. தொழில்நுட்பக் கல்லூரி, திருப்பதி எஸ்.பி.எம்.வி.வி. ஆகியவற்றால் தயாரிக்கப்பட்டவை என்றார்.

தமிழ்நாடு பயோநெஸ்ட் தொகுப்பின் தலைமை நிர்வாக அலுவலர் முத்து சிங்காரம் பேசுகையில், இத்தொகுப்பில் 417 தொழில் வளர்ப்பகங்கள் உள்ளன. இதில், 190 பதிவு செய்யப்பட்ட ஸ்டார்ட் அப்-களில் 107 ஸ்டாட் அப்-கள் பெண்கள் தலைமையில் இயங்குகின்றன. இந்தத் தொகுப்புக்கு இதுவரை 24 காப்புரிமைகள் கிடைத்துள்ளன என்றார்.

சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலைக்கழக முதன்மையர் (திட்டம் மற்றும் மேம்பாடு) எஸ். சுவாமிநாதன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags :
|
|