ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படுமா? மாவட்ட கலெக்டர்களுடன் முதல்வர் ஆலோசனை
By: Monisha Wed, 29 July 2020 09:53:02 AM
ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படுமா? என்பது குறித்து மாவட்ட கலெக்டர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை 10 மணிக்கு ஆலோசனை நடத்துகிறார்.
தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க ஜூலை 31-ம் தேதி வரை பொது ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. இருப்பினும் தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. எனவே ஆகஸ்ட் 1 முதல் புதிய கட்டுப்பாடுகள் மற்றும் தளர்வுகள் அமல்படுத்தப்படவுள்ளது.
இந்நிலையில், இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் கொரோனா தொற்று குறித்து ஆலோசனை நடத்த உள்ளார்.
சென்னை தலைமை செயலகத்தில் இன்று காலை 10 மணிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்துகிறார்.
தமிழகத்தில் அதிகரித்து வரும் தொற்றை தடுக்க மாநிலம் முழுவதுமே ஊரடங்கு உத்தரவு தொடர்ந்து நீடிக்க இக்கூட்டத்தில் முடிவெடுக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
மாவட்ட கலெக்டர்களுடன் ஆலோசனை நடத்தியதன் தொடர்ச்சியாக, மருத்துவ நிபுணர் குழுவுடன் நாளை காலை காணொலிக் காட்சி மூலம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொள்கிறார்.