மருத்துவ குழு மற்றும் பிரதமருடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை
By: Monisha Sat, 13 June 2020 11:03:23 AM
தமிழகத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 40,698 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இதுவரை 22,047 பேர் குணமடைந்துள்ளனர்.
தமிழகத்தில் குறிப்பாக தலைநகர் சென்னையில் கொரோனா வைரஸ் தாக்கம் கடுமையாக அதிகரித்துக் கொண்டே வருகிறது. கொரோனா வைரஸை கட்டுப்படுத்த தமிழக அரசின் சுகாதாரத் துறையும் சென்னை மாநகராட்சியின் இணைந்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இருப்பினும் சென்னையில் கொரோனா நோயின் தாக்கத்தை கட்டுப்படுத்த முடியாமல் உள்ளது.
இந்த நிலையில் சென்னை மற்றும் தமிழகம் முழுவதிலும் அடுத்த கட்டமாக எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து மருத்துவர் குழுவுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை செய்ய உள்ளார். ஏற்கனவே கடந்த சில நாட்களுக்கு முன்னர் மருத்துவக் குழுவுடன் ஆலோசித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வரும் திங்கட்கிழமை காலை 11 மணிக்கு மீண்டும் மருத்துவக் குழுவுடன் ஆலோசனை செய்ய உள்ளார்.
மேலும் பிரதமர் மோடி வரும் 16 மற்றும் 17 ஆம் தேதி தமிழகம் உள்பட அனைத்து மாநில முதல்வர்களுடன் ஆலோசனை செய்ய உள்ளார். அந்த வகையில் தமிழக முதல்வருடன் ஜூன் 17ஆம் தேதி ஆலோசனை நடைபெற உள்ளது. காணொளியில் நடைபெற உள்ள இந்த ஆலோசனையில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
கொரோனாவை கட்டுப்படுத்த உடனடியாக நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்தநிலையில் தற்போது மருத்துவ குழு மற்றும் பிரதமருடன் தமிழக முதல்வர் ஆலோசனை செய்ய உள்ளார்.