முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் மாவட்ட சுற்றுப்பயணம் தற்காலிகமாக ஒத்திவைப்பு
By: Monisha Mon, 21 Sept 2020 10:04:36 AM
தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக, மாவட்டம் வாரியாக சென்று ஆய்வு நடத்தி வருகிறார். இதுவரை, கோவை, மதுரை, தேனி, திண்டுக்கல், திருநெல்வேலி, தென்காசி, திருவள்ளூர், வேலூர், நாமக்கல், திருவண்ணாமலை, விழுப்புரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களுக்கு நேரில் சென்று அவர் ஆய்வு நடத்தியுள்ளார்.
இந்தநிலையில், பிரதமர் நரேந்திரமோடி வரும் 23-ந் தேதி (புதன்கிழமை) 7 மாநில முதல்-மந்திரிகளுடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்த இருக்கிறார். இந்தக் கூட்டத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் பங்கேற்று பேசுகிறார்.
இதனால் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை ராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களுக்கும், 23-ந்தேதி கன்னியாகுமரி மற்றும் விருதுநகர் மாவட்டங்களுக்கும் செல்ல திட்டமிட்டிருந்த பயணத்தில் திடீர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
நாளை ராமநாதபுரம் மாவட்டத்திற்கு மட்டும் செல்லும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மாவட்ட கலெக்டருடனும், அதிகாரிகளுடனும் ஆலோசனை நடத்துகிறார். மேலும், பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்குவதுடன் புதிய திட்டப் பணிகளையும் தொடங்கி வைக்கிறார். மற்ற மாவட்ட பயணத் திட்டங்கள் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.