மருத்துவ நிபுணர்கள் குழுவுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை
By: Nagaraj Tue, 26 May 2020 2:59:58 PM
மருத்துவ நிபுணர்கள் குழுவுடன் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டுள்ளார். இதில் பொது ஊரடங்கை நீட்டிப்பது குறித்து பேசப்படுகிறது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
நேற்று தமிழகத்தில் 805 பேர்களுக்கு கொரோனா தொற்று பரவி இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 17,082 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிப்பு அடைந்த 805 பேர்களில் சென்னையில் மட்டும் 549 பேர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் என்பதால் சென்னையில் கொரோனா பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 11,125 ஆக உயர்ந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தமிழகத்தில் வரும் 31ம் தேதி பொதுமுடக்கம் முடிவடையும் நிலையில் தலைமைச் செயலகத்தில் மருத்துவ நிபுணர்கள் குழுவுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டுள்ளார். இதில் பொது முடக்கத்தை தொடர்வது குறித்தும் ஆலோசிக்கப்படும் என்று தெரிகிறது.
கடந்த இரு முறையும் மருத்துவர்கள் அளித்த பரிந்துரையை ஏற்று ஊரடங்கு தமிழகத்தில் நீடிக்கப்பட்டது. இந்த முறை மருத்துவக்குழுவினர் என்ன தெரிவிப்பார்கள், முதல்வர் என்ன முடிவெடுப்பார் என பெரும் எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.