திருவாரூரில் தற்போது 460 பேர் மட்டுமே கொரோனாவுக்கு சிகிச்சை...முதல்வர் தகவல்
By: Monisha Fri, 28 Aug 2020 2:34:42 PM
தமிழகத்தில் மாவட்டந்தோறும் கொரோனா தடுப்பு மற்றும் சிகிச்சை குறித்தும், மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகள் குறித்தும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு நடத்தி வருகிறார்.
இன்று காலை 9.30 மணியளவில் திருவாரூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு மற்றும் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து ஆய்வு நடத்த கலெக்டர் அலுவலக கூட்ட அரங்குக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வந்தார். ஆய்வு கூட்டத்தில் பங்கேற்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அதிகாரிகளுடன் கலந்துரையாடினார்.
இந்நிலையில், திருவாரூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு மற்றும் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து ஆய்வு நடத்திய பின்னர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:-
திருவாரூர் மாவட்டத்தில் சராசரியாக தினமும் 400 பேருக்கு கொரோனா பரிசோதனை நடைபெறுகிறது. திருவாரூரில் தற்போது 460 பேர் மட்டுமே கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். திருவாரூரில் 2,231 காய்ச்சல் முகாம்களில் 1,73,866 பேர் பயன் பெற்றுள்ளனர்.
சிறப்பு குறைதீர் திட்டத்தில் பெறப்பட்ட 25,861 மனுக்களில் தகுதியான 13,178 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் உழைக்கும் மகளிர் 4,445 பேருக்கு இருசக்கர வாகனம் வாங்க மானியம் வழங்கப்பட்டுள்ளது. சிறப்பு குறைதீர் திட்டத்தில் பெறப்பட்ட மனுக்களில் 3,377 பேருக்கு முதியோர் உதவித்தொகை வழங்கப்படுகிறது. 8,321 சுய உதவிக்குழுக்களுக்கு கடந்த 3 ஆண்டுகளில் ரூ.588 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.