தமிழகத்தில் 38 ஆயிரம் பேருக்கு நகைக்கடன் தள்ளுபடி ரத்து ..கூட்டுறவுத்துறை உத்தரவு
By: vaithegi Fri, 24 June 2022 8:08:48 PM
தமிழகம்: தமிழகத்தில் கூட்டுறவு சங்கத்தில் 5 சவரனுக்கு உட்பட் நகைக்கடன் பெற்றவர்களுக்கு கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று தமிழக முதல்வர் அறிவித்திருந்தார். இதில் முறைகேடுகள் நடைபெற்று வந்ததால் பல நிபந்தனைகள் விதிக்கப்பட்டு தகுதியான நபர்களுக்கு மட்டுமே நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று அரசு ஆணை பிறப்பித்தது.
அதன்படி தள்ளுபடிக்கு விண்ணப்பித்திருந்தவர்களின் விவரங்கள் பரிசீலினை மேற்கொள்ளப்பட்டது. தமிழகத்தில் 48 லட்ச பேர் நகைக்கடன் தள்ளுபடிக்கு விண்ணப்பித்திருந்தனர்.
இதில் 14.50 லட்சம் பயனாளிகள் மட்டுமே தள்ளுபடி பெற தகுதியானவர்கள் என்று பட்டியல் வெளியிடப்பட்டது. அதன்படி பிப்ரவரி மாத இறுதியில் தகுதியான நபர்களுக்கு நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து தற்போது இப்பணி முடிவடையும் நிலையை எட்டியுள்ளது.
இந்த நிலையில் கூட்டுறவு தணிக்கை இயக்குனர் அலுவலக அதிகாரிகள் இது தொடர்பாக ஆய்வு மேற்கொண்டனர். அந்த ஆய்வின் முடிவில் அரசு ஊழியர்கள் அவர்களின் குடும்பத்தினர் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நகைக்கடன் பெற்றுள்ளது என்பது கண்டறியப்பட்டுள்ளது.
இது குறித்து கூட்டுறவு துறை அளித்த உத்தரவுபடி, நகைக்கடன் தள்ளுபடி வழங்கியதில் 37 ஆயிரத்து 984 கடன்தாரர்கள் தகுதியற்றவர்களாக கண்டறியப்பட்டுள்ளது. ஆதலால் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அசல் மற்றும் வட்டி தொகை என 160 கோடி ரூபாய் தள்ளுபடி செய்யக்கூடாது என்று இணைபதிவாளர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தகுதியற்றவர்களுக்கு தள்ளுபடி சான்றையும் ரத்து செய்ய வேண்டும் என்றும் உத்தரவு அளிக்கப்பட்டுள்ளது. அத்துடன் தகுதியற்றவர்களின் பட்டியல் வங்கிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.