அனுமதியின்றி சேவல் சண்டை... கூட்டத்தை விரட்டியடித்த போலீசார்
By: Nagaraj Sat, 14 Jan 2023 5:45:17 PM
கரூர்: போலீசார் பாதுகாப்பு பணி... கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அடுத்த பூலாம்வலசு கிராமத்தில் பொங்கல் பண்டிகை முன்னிட்டு நடைபெறும் தமிழர் பாரம்பரிய வீர விளையாட்டுகளில் ஒன்றான, சேவல் சண்டை நடத்த அனுமதி இல்லாததால் இன்று காலை முதல் அப்பகுதியில் தடுப்புகள் ஏற்படுத்தி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
திடீரென்று அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். இதன் காரணமாக போட்டி நடைபெறும் பகுதியில் ஏராளமான வாகனங்களில் வந்த சேவல் சண்டை ஆர்வலர்கள் மைதானத்திற்கு முன்பு குவிந்தனர்.
மாவட்ட நிர்வாகத்தின் தரப்பில் முறையான அனுமதி வழங்கப்படாத நிலையில்,
தடையை மீறி சேவல் சண்டை போட்டி நடத்தும் விழா கமிட்டியினரை ஏராளமானோர்
சூழ்ந்து கொண்டு கூச்சலிடத் தொடங்கியதால் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.
அதனைத்
தொடர்ந்து ஏடிஎஸ்பி கீதாஞ்சலி தலைமையிலான அதிவிரைவு படை போலீசார்
அப்பகுதிக்கு விரைந்து வந்து கூட்டத்தை விரட்டி அடித்தனர். இதன் காரணமாக
அங்கு கூடியிருந்த சேவல் சண்டை ஆர்வலர்கள் அப்பகுதியில் இருந்து தலை
தெறிக்க ஓடினர் இதன் காரணமாக அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.