Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • குடித்துவிட்டு வாகனம் ஓட்டியவர்களிடம் இத்தனை கோடி அபராதம் வசூல்

குடித்துவிட்டு வாகனம் ஓட்டியவர்களிடம் இத்தனை கோடி அபராதம் வசூல்

By: vaithegi Mon, 27 Feb 2023 11:02:12 AM

குடித்துவிட்டு வாகனம் ஓட்டியவர்களிடம் இத்தனை கோடி அபராதம் வசூல்

சென்னை : சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:- சாலை விபத்துக்களில் உயிரிழப்புகள் ஏற்படுவதற்கு முக்கிய காரணங்களில் ஒன்று குடிபோதையில் வாகனம் ஓட்டுவதாகும். எனவே குடிபோதையில் வாகனம் ஓட்டுவதற்கு சட்டத்தில் கடுமையான தடுப்பு நடவடிக்கையாக தண்டனை வழங்கப்படுகிறது. அபராதத் தொகை ரூ.10,000 ஆக இருப்பதால் பலர் அபராதத்தைச் செலுத்துவதில்லை. மேலும், நீதிமன்றத்தில் உள்ள மெய்நிகர் பிரிவிலிருந்து அவர்களின் தொலைபேசி எண்களுக்கு அழைப்பு வந்தாலும் அபாரதம் செலுத்துவதில்லை. மேலும் 7,667 குடிபோதை வழக்குகள் தீர்க்கப்படாமல் நிலுவையில் உள்ளன.

எனவே இதுபோல விதிமீறுபவர்களுக்கு நிலுவையில் உள்ள வழக்குகள் பற்றி சென்னை பெருநகரில் 10 இடங்களில் அமைந்துள்ள அழைப்பு மையங்கள் மூலம் தகவல் தெரிவித்து, கடந்த 19.02.2023 முதல் 25.02.2023 வரை அவர்களை நேரில் வரவழைத்து வழக்குகளை முடிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. எனவே இதன் விளைவாக சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறையின் அழைப்பு மையங்களின் அழைப்பை ஏற்று 545 பேர் ஆஜராகி அவர்களது நிலுவை அபராதத் தொகையை இணையதளம் மூலம் செலுத்தினார்கள்.

penalty,vehicle ,அபராதம் ,வாகனம்

மேலும் பலர் அழைப்பு மையங்களுக்கு வெளியில் பணம் செலுத்தியதால், அவர்கள் வேறுவிதமாக அபராதம் செலுத்தியிருந்தாலும், அழைப்பு மையங்களின் உதவியுடன் முடிந்த வழக்குகளின் விவரங்களையும் அபராதத் தொகையையும், இந்த அழைப்பு மையங்களில் இருந்து சேகரித்தனர். இத்தொடர் நடவடிக்கையின் மூலம் 10 அழைப்பு மையங்களில் 736 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு அபராதத் தொகையாக ரூ.76.74 லட்சம் செலுத்தப்பட்டது.

இதையடுத்து கடந்த ஒரு மாதத்தில் அழைப்பு மையங்களின் இதே போன்ற நடவடிக்கைகளால் 3,376 வழக்குகள் தீர்க்கப்பட்டு, ரூ.3.49 கோடி அபராத தொகை செலுத்தப்பட்டது. இதனால் ஐந்தாவது வாரத்தில் அழைப்பு மையங்கள் மூலம் நிலுவையிலிருந்த 4,112 குடிபோதை வழக்குகள் தீர்க்கப்பட்டு, ரூ.4.26 கோடி அபராதத் தொகை வசூலிக்கப்பட்டது. குடித்துவிட்டு வாகனம் ஓட்டி அபராதம் செலுத்தாதவர்களின் சம்பந்தப்பட்ட வாகனம் மட்டுமின்றி, வேறு எந்த வாகனங்களாக இருந்தாலும், அசையும் சொத்துக்கள் உட்பட பறிமுதல் செய்ய நீதிமன்ற ஆணை பிறப்பிக்கப்படும் என எச்சரிக்கப்படுகிறது. ஏற்கெனவே இது போல குடிபோதையில் வாகனம் ஓட்டி அபராதம் செலுத்தாதவர்களின் அசையும் சொத்துக்களை பறிமுதல் செய்வதற்கு இதுவரை 347 நீதிமன்ற ஆணை பிறப்பிக்கப்பட்டு அவை செயல்பாட்டில் உள்ளன என்று தெரிவித்துக் கொள்கிறோம்.' என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :