- வீடு›
- செய்திகள்›
- சிவப்பு ரேஷன் கார்டு வைத்திருக்கும் மத்திய அரசு ஊழியர்கள் குறித்த விபரங்களை திரட்டும் பணி
சிவப்பு ரேஷன் கார்டு வைத்திருக்கும் மத்திய அரசு ஊழியர்கள் குறித்த விபரங்களை திரட்டும் பணி
By: Nagaraj Tue, 14 June 2022 5:33:09 PM
புதுச்சேரி: அதிரடி காட்ட ஆரம்பித்த புதுச்சேரி அரசு...சிவப்பு ரேஷன் கார்டு வைத்திருக்கும் மத்திய அரசு ஊழியர்கள் குறித்த விபரங்களை திரட்டி, அவர்களை நேரடி உணவு மானிய திட்டத்தில் இருந்து நீக்குவதற்கான பணியை குடிமைப்பொருள் வழங்கல் துறை முடுக்கி விட்டுள்ளது. புதுச்சேரியில் குடிமைப்பொருள் வழங்கல் துறை மூலம் மக்களுக்கு ரேஷன் கார்டுகள் விநியோகிக்கப்பட்டு வருகிறது.மாநிலத்தில் இதுவரை 3,51,429 மஞ்சள், சிவப்பு நிற ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளன. இதில், வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு சிவப்பு நிற கார்டு வழங்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு, மாநில அரசின் கொள்கை முடிவின்படி, உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் அரிசிக்கான மானியத் தொகையாக ஒரு கிலோவிற்கு 33.57 ரூபாய் வீதம் வழங்கப்படுகிறது. அதன்படி, மாதந்தோறும் 12 கோடி ரூபாயும், ஆண்டிற்கு ரூ.140 கோடி வரை, பயனாளிகளின் வங்கி கணக்கில் நேரடி மானியமாக செலுத்தப்பட்டு வருகிறது.
ஆனால், சிவப்பு ரேஷன் கார்டுகளை, பொருளாதார ரீதியாக வசதி படைத்தவர்கள், அதிக சம்பளம் வாங்கும் அரசு ஊழியர்கள் பலரும் வைத்திருப்பதாகவும், அவர்கள் பல ஆண்டுகளாக அரசு மானியத்தை பெற்று வருவதாக வும் தொடர்ந்து புகார்கள் அதிகளவில் எழுந்தன. அதையடுத்து, புதுச்சேரி அரசின் பல்வேறு துறைகளில் பணியாற்றும் ஊழியர்களின் பட்டியலை பெற்ற குடிமைப்பொருள் வழங்கல் துறை, அவர்களது பெயர்களை நேரடி உணவு மானிய பட்டியலில் இருந்து நீக்கியது.ஆனாலும், சிவப்பு ரேஷன் கார்டு வைத்துள்ள மத்திய அரசு ஊழியர்களை கண்டறிந்து, அவர்களின் பெயர்களை நீக்க முடிவில்லை. இது சர்ச்சையை ஏற்படுத்தியது. அதை தொடர்ந்து, 'சம்பளம் இல்லாமல் பல ஆண்டுகளாக வேலை செய்யும் மாநில அரசு ஊழியர்களின் பெயர்களை சிவப்பு ரேஷன் கார்டு பட்டியலில் இருந்து நீக்கம் செய்யப்பட்டது. அதிக சம்பளம் வாங்கும் மத்திய அரசு ஊழியர்களை ஏன் நீக்கவில்லை' என கேள்வி எழுந்தது. இந்நிலையில், வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள உண்மையான பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் கிடைக்கும் வகையில், மத்திய அரசு ஊழியர்களை சிவப்பு ரேஷன் கார்டு பட்டியலில் இருந்து நீக்கும் நடவடிக்கையை குடிமைப்பொருள் வழங்கல் துறை முடுக்கி விட்டுள்ளது. அதற்காக, அந்த ஊழியர்களின் ரேஷன் கார்டு, ஆதார் கார்டு விபரங்களை திரட்டி வருகிறது. ஜிப்மர் மருத்துவமனை, புதுச்சேரி பல்கலைக் கழகம், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள், இன்ஸ்சூரன்ஸ் நிறுவனம் என மாநிலத்தில் உள்ள மத்திய அரசின் அலுவலகங்களுக்கு குடிமைப்பொருள் வழங்கல் துறை, தனித்தனியே கடிதம் எழுதி, ஊழியர்கள் பற்றிய விபரங்களை திரட்டி வருகிறது.