கலை மற்றும் அறிவியியல் கல்லூரி முதலாமாண்டு மாணவர்களுக்கு இன்று வகுப்புகள் தொடக்கம்
By: vaithegi Mon, 03 July 2023 09:44:03 AM
சென்னை: உயர்கல்வித்துறையின் கீழ் செயல்படும் 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள இளநிலை படிப்பிற்கான மாணவர் சேர்க்கைக்கு, www.tngasa.in என்ற இணையதள முகவரியில் கடந்த மே -8ம் தேதி முதல் மே மாதம் 22ம் தேதி வரை மாணவர்கள் பதிவு செய்தனர். ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க முடியாத மாணவர்களுக்கு கல்லூரியில் உதவி மையங்கள் மூலம் விண்ணப்பிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
இதனை அடுத்து மொத்தம் 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உள்ள 1,07, 299 இடங்களில் சேர 2,46, 295 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. மாணவர்களின் மதிப்பெண் அடிப்படையில் தரவரிசைப் பட்டியல் தயார் செய்து கல்லூரிகளுக்கு கடந்த 25ம் தேதி அனுப்பி வைக்கப்பட்டது.
சிறப்பு ஒதுக்கீட்டு பிரிவில் விளையாட்டு வீரர்கள் மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகளுக்கு கடந்த மே 29 ந் தேதி முதல் 31 ந் தேதி வரை கலந்தாய்வு நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து ஜூன் 1-ம் தேதி முதல் 10ம் தேதி வரை முதல் கட்ட கலந்தாய்வும், கடந்த ஜூன் 12 முதல் ஜூன் 30ம் தேதி வரை நடைபெற்ற 2 கட்ட கலந்தாய்வும் நடைபெற்றது. இதையடுத்து இதில் 36,626 மாணவர்களும், 48,273 மாணவிகளும் என்று மொத்தம் 84,899 மாணவ மாணவியர் சேர்ந்தனர். அரசுப் பள்ளிகளில் படித்து புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் 23,295 மாணவிகள் சேர்ந்து உள்ளனர்.
இதை தொடர்ந்து இன்று முதல் முதலாமாண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கப்படுகிறது. மேலும் இடங்கள் காலியாக இருப்பதால் ஜூலை 4 ஆம் தேதி முதல் இன சுழற்சி(Rule of Reservation) அடிப்படையில் கலந்தாய்வு நடத்தப்படும் என உயர்கல்வித்துறை அறிவித்தது . எனவே அதன்படி வருகிற ஜூலை 4ல் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும் ,5ம் தேதி மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும், 6ம் தேதி ஆதிதிராவிடர் வகுப்பினருக்கும், வருகிற ஜூலை 7ம் தேதி அனைத்து பிரிவினருக்கும் நேரடியாக மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.