செங்கல்பட்டில் வரும் செப். 2-ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம்
By: vaithegi Tue, 29 Aug 2023 11:10:14 AM
செங்கல்பட்டு: பல்லாவரத்தில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் ... தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், தமிழ்நாடு நகர்ப்புற ஊரக வாழ்வாதார இயக்கம் போன்றவை இணைந்து சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமை வரும் செப். 2-ம் தேதி, செங்கல்பட்டு மாவட்டம், பல்லாவரம் வட்டத்தில் உள்ள வேல்ஸ் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் உயர் கல்வி நிறுவன வளாகத்தில், நடத்தவுள்ளன.
இந்த முகாமில் 200-க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் மற்றும் திறன் பயிற்சி அளிக்கும் நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களுக்கான மனிதவள தேவைக்கான நபர்களை நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்ய உள்ளனர்.
இதனை அடுத்து இந்த வேலைவாய்ப்பு முகாமில் 8, 10, 12-ம் வகுப்பு, பட்டப் படிப்பு பொறியியல், ஐடிஐ மற்றும் டிப்ளமோ படித்த நபர்கள், செவிலியர்கள், மாற்றுத் திறனாளிகள் போன்றவர்கள் தேர்ந்தேடுக்கப்படவுள்ளனர்.
வயது வரம்பு 18 முதல் 40 வயது வரை உள்ளவர்கள் தங்களுடைய கல்விச் சான்று, பாஸ்போர்ட் அளவிலான புகைப்படத்துடன் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை வேலைவாய்ப்பு முகாமில் நேரில் கலந்து கொண்டு பயன்பெறலாம். மேலும், வேலை வாய்ப்பு முகாமில் பங்குபெற விருப்பமுள்ள நபர்கள் https://tnprivatejobs.tn.gov.in இணையதளம் மூலம் பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும், தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் பணி நியமனம் பெறுபவர்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்படாது என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.