டெல்லியில் கொரோனா சிறப்பு மருத்துவ மையமாக மாறிய காமன்வெல்த் விளையாட்டு அரங்கம்
By: Karunakaran Thu, 02 July 2020 11:57:04 AM
இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. கொரோனா அதிகம் பாதித்த மாநிலங்களில் மகாராஷ்டிரா, தமிழகத்தை தொடர்ந்து டெல்லி மூன்றாமிடத்தில் உள்ளது. டெல்லியில் இதுவரை 89802 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா காரணமாக 2803 பேர் மரணம் அடைந்துள்ளனர். தற்போது டெல்லியில் புதிய நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பதால், படுக்கைகளின் எண்ணிக்கையை அரசு அதிகரித்து வருகிறது. அதன்படி, டெல்லியில் உள்ள காமன்வெல்த் உள்விளையாட்டு அரங்கம், 600 படுக்கைகளுடன் கூடிய கொரோனா சிறப்பு மையமாக மாற்றப்பட்டுள்ளது.
கொரோனா சிறப்பு மையமாக மாற்றப்பட்ட காமன்வெல்த் உள்விளையாட்டு அரங்கத்தை டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் மற்றும் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா ஆகியோர் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இன்னும் சிலநாட்களில் இந்த சிறப்பு மையம் செயல்பாட்டிற்கு வரும் என டெல்லி முதல்வர் தெரிவித்துள்ளார்.
இந்த மையத்தில் மொத்தம் 80 டாக்டர்கள், 150 செவிலியர்கள் இருப்பார்கள் எனவும், தீவிர சிகிச்சை தேவைப்படும் நோயாளிகள் யாரும் இந்த மையத்திற்கு அழைத்து வரப்பட மாட்டார்கள். மருத்துவமனையில் மட்டுமே அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், 40 ஓட்டல்களையும், 80 திருமண மண்டபங்களையும் கொரோனா சிறப்பு மையங்களாக மாற்றும் பணியில் நடைபெற்று வருகிறது .