- வீடு›
- செய்திகள்›
- சட்டசபை தேர்தலை முன்னிட்டு மார்ச் மாதத்துக்குள் பள்ளி, கல்லூரி தேர்வுகளை நடத்தி முடிக்க ஆலோசனை
சட்டசபை தேர்தலை முன்னிட்டு மார்ச் மாதத்துக்குள் பள்ளி, கல்லூரி தேர்வுகளை நடத்தி முடிக்க ஆலோசனை
By: Monisha Wed, 11 Nov 2020 6:30:22 PM
தமிழக சட்டசபைக்கு வருகிற ஏப்ரல், மே மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக வரைவு வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. தேர்தல் எந்த தேதியில் நடத்தப்படும் என்ற அறிவிப்பு மார்ச் முதல் வாரம் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தலை நடத்துவதற்கும், ஓட்டு பெட்டிகளை பாதுகாப்பாக வைத்து எண்ணுவதற்கும் பள்ளி, கல்லூரி கட்டிடங்கள்தான் முழுமையாக பயன்படுத்தப்படுகின்றன.
இந்த சூழலில் தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பள்ளி, கல்லூரிகள் கடந்த 8 மாதங்களாக திறக்கப்படாமல் மூடப்பட்டுள்ளன. பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படாவிட்டாலும் ஆன்லைன் மூலம் பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. காலாண்டு தேர்வு நடத்தப்படாத சூழலில் தற்போது டிசம்பர் மாதம் அரையாண்டு தேர்வு நடத்தப்பட வேண்டும்.
ஆனால் போதிய கால இடைவெளி இல்லாத காரணத்தால் 40 சதவீத பாடங்களை குறைத்து நேராக முழு ஆண்டு தேர்வு எழுதும் வகையில் பாடங்கள் நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் வருகிற மார்ச் மாதத்துக்குள் பள்ளி, கல்லூரிகளுக்கான இறுதித் தேர்வுகளை நடத்தி முடிக்க வேண்டும் என்பதால், அதற்கேற்ப பாடங்களை விரைந்து நடத்தி தேர்வுக்கான ஏற்பாடுகளை கல்வித்துறை அதிகாரிகள் இப்போதே திட்டமிட்டு வருகிறார்கள்.
பள்ளி, கல்லூரிகள் திறக்கும் தேதி எப்போது என்பது இன்னும் ஓரிரு நாளில் தெரியவரும் என்பதால், எந்தெந்த தேதிகளில் பரீட்சை நடைபெறும் என்ற அட்டவணையும் விரைவில் வெளியாக வாய்ப்புள்ளது.