புதுச்சேரி மீனவ கிராமத்தில் சமரச கூட்டத்தில் மோதல்
By: Nagaraj Fri, 23 June 2023 8:25:35 PM
புதுச்சேரி: சமரச கூட்டத்தில் மோதல்... புதுச்சேரி மீனவ கிராமத்தில் பஞ்சாயத்து தலைவரை தேர்ந்தெடுப்பது தொடர்பாக நடைபெற்ற சமரச கூட்டத்தில் இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில், ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர்.
வம்பாகீரப்பாளையத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை பஞ்சாயத்து நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பது வழக்கம் என கூறப்படுகிறது. சின்னய்யன் என்பவரின் தலைமையிலான நிர்வாகிகளின் பதவிக்காலம் முடிந்தும் புதியவர்கள் தேர்ந்தெடுக்கப்படாமல் பழைய நிர்வாகிகளே செயல்பட்டு வந்தனர்.
இதனால் எதிர்தரப்பை சேர்ந்த சவுந்தரராஜன் என்பவரும், அவரது ஆதரவாளர்களும் பிரச்சனை எழுப்பினர். இருதரப்பினரிடையே சமாதானம் செய்ய புதன்கிழமை அன்று மாரியம்மன் கோயிலில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
அப்போது ஏற்பட்ட தகராறில், நாற்காலிகள் மற்றும் கையில் கிடைத்த பொருட்களை கொண்டு ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இதுதொடர்பாக தகவல் அறிந்து வந்த ஒதியஞ்சாலை போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதில், அவர்கள் கலைந்து சென்றனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.