- வீடு›
- செய்திகள்›
- தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் சிறையில் இருந்த டாக்டர் கபீல் கானுக்கு நிபந்தனை ஜாமீன்
தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் சிறையில் இருந்த டாக்டர் கபீல் கானுக்கு நிபந்தனை ஜாமீன்
By: Karunakaran Wed, 02 Sept 2020 09:34:46 AM
கடந்த 2017-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆக்சிஜன் பற்றாக்குறையால் உத்தர பிரதேச மாநிலம் கோரக்பூர் அரசு மருத்துவமனையில் 63 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தொடர்பாக டாக்டர் கபீல் கான் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இதுகுறித்த விசாரணை நடைபெற்றபோது, கபீல் கான் குற்றமற்றவர் என்று அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதனால், 9 மாதங்களாக சிறையில் இருந்த கபீல் கான் ஜாமீனில் வெளியே வந்தார். இந்நிலையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் குடியுரிமை திருத்தச்சட்டத்திற்கு எதிராக அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற போராட்டத்தின்போது அமைதி மற்றும் சமூக நல்லிணக்கத்தை குலைக்கும் வகையில் கருத்து தெரிவித்ததாக அவர் மீண்டும் கைது செய்யப்பட்டு மதுராவில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டார்.
கைது செய்யப்பட்ட கபீல் கான் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் தனது மகன் சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக டாக்டர் கபீல் கானின் தாயார் அலகாபாத் நீதிமன்றத்தில் வழக்குத்தொடர்ந்தார். பல மாதங்களாக நடைபெற்று வந்த இந்த வழக்கு விசாரணை நேற்று நடைபெற்றபோது, டாக்டர் கபீல் கான் மீது தொடரப்பட்ட தேசிய பாதுகாப்பு சட்டத்தை ரத்து செய்த நீதிமன்றம் அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது.
மேலும், சிறையில் உள்ள டாக்டர் கபீல் கானை உடனடியாக விடுதலை செய்யவேண்டும் என மாநில அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவையடுத்து கடந்த ஜனவரி மாதம் கைது செய்யப்பட்டு 7 மாதங்கள் உத்தரபிரதேசத்தின் மதுரா சிறையில் அடைக்கப்பட்டிருந்த டாக்டர் கபீல் கான் இன்று விடுதலை செய்யப்பட்டார்.