காஷ்மீரில் தற்போது பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே மோதல்
By: Karunakaran Tue, 07 July 2020 11:21:55 AM
ஜம்மு காஷ்மீரில் அடிக்கடி பயங்கரவாதிகள் பதுங்கியிருந்து தாக்குதல் நடத்தும் சம்பவம் நடைபெற்று வருகின்றன. இதற்கு இந்திய பாதுகாப்பு படையினரும் தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர். மேலும் காஷ்மீரில் பதுங்கியுள்ள பயங்கரவாதிகளை கண்டறிய தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டம் கோஷூ பகுதியின் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு இன்று காலை கிடைத்த ரகசிய தகவலின் படி,பாதுகாப்பு படையினர் உடனே அங்கு சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை கண்டதும் அவர்கள் மீது தாக்குதல் நடத்தினர். பயங்கரவாதிகளது தாக்குதலுக்கு பாதுகாப்பு படையினரும் தகுந்த பதிலடி கொடுத்து வருகின்றனர். பாதுகாப்பு படையினருடன் இணைந்து காஷ்மீர் போலீசாரும் பயங்கரவாதிகளை அழிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
தொடர்ந்து பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே தாக்குதல் நடந்து வருகிறது. தற்போது தாக்குதல் நடைபெறும் இடத்தில் எத்தனை பயங்கரவாதிகள் பதுங்கியுள்ளனர் என்ற தகவல் வெளியாகவில்லை. இந்த மோதலில் உயிரிழப்பு மற்றும் காயமடைந்தோர் குறித்தும் எந்த தகவலும் வெளியாகவில்லை.