கொரோனாவால் பாதித்த காங்கிரஸ் எம்.பி., வசந்தகுமார் இன்று மாலை காலமானார்
By: Nagaraj Fri, 28 Aug 2020 7:50:05 PM
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. வசந்தகுமார் (70) இன்று மாலை உயிரிழந்தார்.
கன்னியாகுமாரி தொகுதி காங்கிரஸ் எம்.பி., வசந்தகுமாரின் நேர்முக உதவியாளா் போத்திராஜுக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து எம்.பி., வசந்தகுமாா், அவரது மனைவி தமிழ்ச்செல்வி ஆகியோருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.
இதில், அவா்கள் இருவருக்கும் கொரோனா இருப்பது கடந்த 10-ம் தேதி உறுதிப்படுத்தப்பட்டது. இதையடுத்து, இருவரும் சென்னையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.
வசந்தகுமாரின் உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்ததை அடுத்து செயற்கை சுவாசக்
கருவியின் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அவரது உடல்நிலை
கவலைக்கிடமாக இருப்பதாக இன்று காலை மருத்துவமனை தரப்பில் தகவல்கள்
தெரிவிக்கப்பட்டன.
இந்நிலையில், இன்று மாலை அவர் உயிரிழந்ததாக
அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்த முதல் எம்.பி.,
வசந்தகுமார் என்பதும் குறிப்பிடத்தக்கது.