30க்கும் அதிகமான நாடுகளில் தேர்தல் முடிவுகளை மாற்ற சதி நடந்ததாக தகவல்
By: Nagaraj Fri, 17 Feb 2023 10:46:49 AM
லண்டன்: இந்தியா உட்பட 30க்கும் மேற்பட்ட நாடுகளில் நடந்த பொதுத் தேர்தல் முடிவுகளை மாற்ற இஸ்ரேலின் தனியார் உளவு நிறுவனம் ஒன்று சதி செய்துள்ளது என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.
இங்கிலாந்தின் பிரபல பத்திரிக்கையான தி கார்டியனில் இந்த அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இஸ்ரேலை தளமாகக் கொண்ட குழுவான டீம் ஜார்ஜ், தேர்தல் முடிவுகளை போலி கணக்குகள் மற்றும் சமூக ஊடகங்களில் ஹேக்கிங் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
கார்டியன் நாளிதழின் அறிக்கையின்படி, இந்த நிறுவனம் அரசியல் கட்சிகள் மற்றும் அரசாங்கங்களிடமிருந்து பல ஆயிரம் கோடி பணத்தைப் பெற்று, அவர்களின் ஆதரவைப் பெறுவதற்காக போலி மக்கள் கருத்தை உருவாக்கி பொதுமக்களின் கருத்தை கையாண்டது. சர்வதேச ஊடகவியலாளர்கள் பல மாதங்கள் பணியாற்றியதன் மூலம் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டது.
அந்த அறிக்கையின்படி, பெங்களூரைச் சேர்ந்த பத்திரிக்கையாளரும் ஆர்.எஸ்.எஸ்-ன் தீவிர எதிர்ப்பாளருமான கவுரி லங்கேஷ்தான் இஸ்ரேலிய உளவு அமைப்பின் ஊழலை முதலில் வெளிக்கொண்டு வந்தார்.
கௌரி லங்கேஷ் ஏஜ் ஆஃப் ஃபால்ஸ் நியூஸ் என்ற தலைப்பில் கட்டுரையை எழுதி முடித்த சில மணிநேரங்களில், அவர் அடையாளம் தெரியாத ஆசாமிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
அவரது அறிக்கையின் அடிப்படையில் இந்த விசாரணையை மேற்கொண்டதாக சர்வதேச ஊடக விசாரணை நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் எந்த தேர்தலிலும் என்னென்ன சதிகள் நடந்தன என்ற விவரங்களை அது வெளிப்படுத்தவில்லை.