தமிழகத்தில் ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு கூட்டம் தள்ளிவைப்பு
By: vaithegi Mon, 11 July 2022 5:43:20 PM
தமிழகம்: தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியில் வேலை பார்த்து வரும் தலைமை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கான பணி உயர்வு கலந்தாய்வுக் கூட்டம் ஒவ்வொரு ஆண்டும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
அதையடுத்து இந்தாண்டும் அரசு, நகராட்சி உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக இருக்கும் தலைமை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு கூட்டம் கல்வி தகவலியல் மேலாண்மை முறைமை (EMIS) மூலமாக ஆன்லைன் மூலமாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி அரசு, நகராட்சி, உயர்நிலைப் பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக இருக்கும் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு இன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
மேலும், அரசு மற்றும் நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள பள்ளி தலைமையாசிரியர்களுக்கான கலந்தாய்வு நாளையும், நகராட்சி உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்களுக்கான கலந்தாய்வு ஜூலை 13 ஆம் தேதியும் நடைபெறுவதாக இருந்தது.
ஆனால், தற்போது அரசு, நகராட்சி, உயர்நிலைப் பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக இருக்கும் தலைமை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு கூட்டம் நடைமுறைகள் சென்னை உயர்நீதிமன்ற இடைக்கால ஆணையின் அடிப்படையில் தள்ளி வைக்கப்படவுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை திடீர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. மேலும், கலந்தாய்வு கூட்டம் தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக அனைத்து முதன்மைச் கல்வி அலுவலர்களுக்கும் சுட்டறிக்கை ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.