கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக மந்திரி ஹர்ஷ வர்தன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்
By: Karunakaran Fri, 31 July 2020 2:13:25 PM
இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து கொண்டே செல்கிறது. ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டிருப்பதாலும், பரிசோதனைகளை தொடர்ந்து அதிகரிப்பதாலும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தற்போது தினசரி பரிசோதனை எண்ணிக்கை 6 லட்சத்தை கடந்துள்ளது.
நாடு முழுவதும் இதுவரை மொத்தம் 1,88,32,970 சாம்பிள்கள் பரிசோதனை செய்யப்பட்டிருப்பதாக ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது. கொரோனாவால் இதுவரை 16,38,871 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 10,57,806 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். கொரோனாவால் 35,747 பேர் உயிரிழந்துள்ளனர்.
தற்போது, கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஹர்ஷ வர்தன் தலைமையில் அமைச்சர்கள் குழுவின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் வெளியுறவுத் துறை மந்திரி ஜெய்சங்கர், விமான போக்குவரத்து துறை மந்திரி ஹர்தீப் சிங் பூரி ஆகியோர் பங்கேற்றனர்.
அப்போது பேசிய சுகாதாரத்துறை மந்திரி ஹர்ஷ வர்தன், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், கொரோனா பாதிப்பில் இருந்து குணமடையும் விகிதம் 64.54 சதவீதமாக உயர்ந்திருப்பதாகவும், கொரோனா பாதிப்பு இரட்டிப்பாகும் கால அளவு தற்போது 21 நாட்களாக இருப்பதாகவும் தெரிவித்தார்.