Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • 28 ஆண்டுகளுக்கு முன்பு கேரள கன்னியாஸ்திரி மடத்தில் நடந்த கொலைக்கு இன்று தண்டனை

28 ஆண்டுகளுக்கு முன்பு கேரள கன்னியாஸ்திரி மடத்தில் நடந்த கொலைக்கு இன்று தண்டனை

By: Karunakaran Wed, 23 Dec 2020 08:23:25 AM

28 ஆண்டுகளுக்கு முன்பு கேரள கன்னியாஸ்திரி மடத்தில் நடந்த கொலைக்கு இன்று தண்டனை

கேரள மாநிலம் கோட்டயம் பயஸில் உள்ள கன்னியாஸ்திரிகள் மடத்தில் உள்ள கிணற்றில் 1992-ம் ஆண்டு மார்ச் 27-ந் தேதி இளம் கன்னியாஸ்திரி அபயா என்பவர் இறந்து கிடந்தார். இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்திய கோட்டயம் போலீசாரும், குற்ற புலனாய்வு துறையும் தற்கொலை என வழக்கை முடித்து வைத்தது. பின்னர் இந்த வழக்கு ஐகோர்ட்டு உத்தரவின் பேரில் 1993-ம் ஆண்டு மார்ச் 23-ந் தேதி கொச்சி சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டது.

விசாரணையில், இந்த கொலைக்கான ஆதாரங்கள் இல்லை என 3 முறை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. எனினும் 2007-ம் ஆண்டு மீண்டும் சி.பி.ஐ. புதிய குழு விசாரணையை தொடங்கியது. இதை தொடர்ந்து 2008-ம் ஆண்டு இந்த வழக்கில் அதிரடி திருப்பமாக பாதிரியார் தாமஸ் கோட்டூர், கன்னியாஸ்திரி செபி மற்றும் பாதிரியார் ஜோஸ் ஆகியோரை சி.பி.ஐ. அதிரடியாக கைது செய்தது.

convicted,murder,kerala,nunnery ,குற்றம், கொலை, கேரளா, கன்னியாஸ்திரி

பாதிரியார் தாமஸ் கோட்டூர் மற்றும் கன்னியாஸ்திரி செபி ஆகிய இருவரும் உடலுறவில் ஈடுபட்டதை இளம் கன்னியாஸ்திரி அபயா நேரில் பார்த்து விட்டதால், இந்த விவகாரம் வெளியே தெரிந்தால் அவமானமாகி விடும் என நினைத்த அவர்கள், அபயாவை கோடாரியால் தாக்கி கிணற்றில் தள்ளி கொலை செய்தது தெரியவந்தது. பின்னர் இது தொடர்பான வழக்கு திருவனந்தபுரம்சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் நடைபெற்று வந்தது. 2009-ம் ஆண்டு ஜூலை 17-ந் தேதி கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில் கொலை வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் ஐகோர்ட்டை அணுகினர். இந்நிலையில் பாதிரியார் ஜோஸ் மீதான குற்றச்சாட்டு தகுந்த ஆதாரங்களுடன் நிரூபிக்கப்படாத நிலையில் அவரை கோர்ட்டு விடுதலை செய்தது. கடந்த ஆகஸ்டு 26-ந் தேதி மீண்டும் விசாரணை தொடங்கியது. இந்த வழக்கில் சேர்க்கப்பட்ட 177 சாட்சிகளில் 49 பேர் சாட்சியம் அளித்தனர். கடந்த 28 ஆண்டுகளாக நடந்து வந்த வழக்கு விசாரணை முடிவுக்கு வந்த நிலையில் நேற்று பாதிரியார் தாமஸ் கோட்டூர், கன்னியாஸ்திரி செபி ஆகியோர் 2 பேரையும் கொலை குற்றவாளிகள் என திருவனந்தபுரம் சி.பி.ஐ. கோர்ட்டு உறுதி செய்து உத்தரவிட்டது.

குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் இன்று அறிவிக்கப்படுகிறது. தொடர்ந்து இருவரையும் போலீசார் சிறையில் அடைத்தனர். 28 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த கொலை வழக்கில் பாதிரியார், கன்னியாஸ்திரி இருவரும் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்ட சம்பவம் கேரளாவில் பரபரப்பாக பேசப்பட்டது.

Tags :
|
|