- வீடு›
- செய்திகள்›
- பெலாரஸ் போராட்டங்களின் ஒருங்கிணைப்பாளர் கடத்தப்பட்டு நாட்டை விட்டு வெளியேற்ற முயற்சி
பெலாரஸ் போராட்டங்களின் ஒருங்கிணைப்பாளர் கடத்தப்பட்டு நாட்டை விட்டு வெளியேற்ற முயற்சி
By: Karunakaran Wed, 09 Sept 2020 10:30:00 AM
பெலாரஸ் நாட்டில் கடந்த 26 ஆண்டுகளாக அலெக்சாண்டர் லூகாஷென்கோ அதிபராக பதவி வகித்து வருகிறார். கடந்த மாதம் நடைபெற்ற தேர்தலிலும் அலெக்சாண்டரே வெற்றி பெற்று மீண்டும் அதிபராக அறிவிக்கப்பட்டார். இதனால் எதிர்க்கட்சி சார்பில் நாடு முழுவதும் கடந்த 1 மாதமாக போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அதிபர் அலெக்சாண்டர் தனது பதவியில் இருந்து விலகி அதிகாரத்தை எதிர்க்கட்சியிடம் ஒப்படைப்பது தொடர்பாக ஒருங்கிணைப்பு குழு ஒன்று எதிர்கட்சி சார்பில் அமைக்கப்பட்டது.
குழுவில் பிரதான எதிர்கட்சி தலைவரான ஸ்வியாட்லானா சிகானெஸ்கயா மற்றும் அவரது ஆதரவாளர்கள் வெரோனிகா டிசிப்கலோ மற்றும் மரியா கொலிஸ்னிகோவா என மூன்று பெண்கள் முக்கிய நபர்களாக உள்ளனர். தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட சில நாட்களிலேயே எதிர்கட்சி தலைவரான ஸ்வியாட்லானா சிகானெஸ்கயா கைது நடவடிக்கைக்கு அஞ்சி லிதுவேனியாவுக்கு தப்பிச்சென்றுவிட்டார். மற்றொரு ஒருங்கிணைப்பாளரான வெரோனிகா டிசிப்கலோவும் தனது குடும்பத்துடன் போலாந்து தப்பிச்சென்றுவிட்டார்.
மரியா கொலிஸ்னிகோவா மட்டும் பெலாரஸ் நாட்டிலேயே இருந்து கொண்டு போராட்டங்களை முன்னெடுத்து நடத்தி வந்தார். கடந்த ஞாயிற்றுக்கிழமை போராட்டம் நடைபெற்றபோது, சில மணிநேரங்களில் மரியா கொலிஸ்னிகோவாவை அவரது ஆதரவாளர்கள் 2 பேருடன் சேர்த்து முகமூடி அணிந்த மர்ம நபர்கள் காரில் கடத்தி சென்றனர். மரியாவின் ஆதரவாளர்கள் நேற்று உக்ரைன் நாட்டிற்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் இருவரும் நேற்று உக்ரைன் தலைநகர் கிவ்வில் அளித்த பேட்டியில், மரியா கொலிஸ்னிகோவாவுடன் சேர்த்து எங்கள் 2 பேரையும் முகமூடி அணிந்த மர்ம நபர்கள் காரில் கடத்தி சென்றனர். மேலும், அவர்கள் நாங்கள் குடியிருந்த பகுதிக்கு சென்று எங்கள் பார்ஸ்போர்ட்டை கைப்பற்றிக்கொண்டனர். எங்கள் 2 பேரையும் உக்ரைனுக்கு நாடுகடத்தி விட்டனர். அதேபோல் மரியாவையும் அவர்கள் நாடுகடத்த முற்பட்டனர். அவர் தனது பாஸ்போர்ட்டை கிழித்து வீசிவிட்டு பெலாரசை விட்டு தான் எங்கும் செல்லமாட்டேன் என கூறினார் என்று தெரிவித்தனர்.