திருமலை-திருப்பதி தேவஸ்தான ஊழியர்கள் 160 பேருக்கு கொரோனா பாதிப்பு
By: Karunakaran Fri, 17 July 2020 1:25:13 PM
இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து கொண்டே செல்கிறது. ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டிருப்பதாலும், கொரோனா பரிசோதனைகளை அதிகரித்திருப்பதாலும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது. இந்நிலையில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டபோது, அதன் ஒரு பகுதியாக திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டது.
இந்நிலையில், திருமலை-திருப்பதி தேவஸ்தானத்தில் பணிபுரியும் 160 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து திருமலை-திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் ஒய்.வி.சுப்பாரெட்டி அளித்த பேட்டியில், திருமலையில் ஏழுமலையான் கோவில் உள்பட பல்வேறு இடங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் ஆந்திர மாநில காவல் துறையை சேர்ந்த சிறப்புப் போலீசாரில் 60 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
திருமலை-திருப்பதி தேவஸ்தான பாதுகாப்பு மற்றும் பறக்கும்படை பிரிவில் பணியாற்றி வரும் ஊழியர்களில் 16 பேருக்கும், லட்டு தயாரிப்பு மற்றும் வினியோகத்துறையில் பணியாற்றி வரும் ஊழியர்கள் 14 பேருக்கும், ஏழுமலையான் கோவில் அர்ச்சகர்கள், ஊழியர்கள் என 70 பேருக்கும் ஆக மொத்தம் 160 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சுப்பாரெட்டி கூறியுள்ளார்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மொத்தம் உள்ள 40 அர்ச்சகர்களில், 14 அர்ச்சகர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட அனைவரும் திருமலையில் உள்ள அர்ச்சகர்கள் பவனில் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.