உலகம் முழுவதும் 2.50 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு
By: Karunakaran Sun, 30 Aug 2020 09:20:42 AM
கடந்த ஆண்டு இறுதியில் சீனாவில் உள்ள வுகான் நகரில் கொரோனா வைரஸ் முதன் முதலாக தோன்றியது. தற்போது உலகின் 200க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. தற்போது உலக அளவில் கொரோனா வைரஸ் தாக்குதலில் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 2.50 கோடியைத் தாண்டியுள்ளது.
பல்வேறு நாடுகள் ஊரடங்கு தளர்வை அமல்படுத்தியுள்ளதாலும், கொரோனா பரிசோதனைகளை அதிகரித்ததாலும் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது. குறிப்பாக அமெரிக்கா, பிரேசில், இந்தியா போன்ற நாடுகளில் கொரோனா பாதிப்பு பல மடங்கு உயர்ந்து கொண்டே வருகிறது.
கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே சென்றாலும் மருத்துவ துறையினரின் தன்னலமற்ற சேவையால் பலர் கொரோனாவிலிருந்து மீண்டு வந்த வண்ணம் உள்ளனர். தற்போது, உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து 1.74 கோடி பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 8.44 லட்சத்தைக் கடந்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்களில் 61 ஆயிரத்து 300-க்கும் மேற்பட்டோரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் மேலும் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என கருதப்படுகிறது.