வங்காளதேசத்தில் ஒரே நாளில் 2,024 பேருக்கு கொரோனா பாதிப்பு
By: Karunakaran Mon, 17 Aug 2020 2:50:06 PM
சீனாவின் உகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. தற்போது சீனாவில் கொரோனா தொற்று கட்டுப்பாட்டுக்குள் வந்து விட்டாலும் கூட பிற நாடுகளில் அதன் தாக்கம் அதிகரித்து கொண்டே செல்கிறது. தற்போது, உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் 2 கோடிக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இதுவரை 7.50 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் வங்காளதேசத்திலும் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருகிறது. தற்போது அங்கு கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 2.75 லட்சத்தை கடந்துள்ளது.
வங்காளதேசத்தில் நேற்று ஒரே நாளில் 2,024 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் அங்கு கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 2,76,549 ஆக அதிகரித்துள்ளது. மேலும், அங்கு ஒரே நாளில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு 32 பேர் பலியாகினர். இதனால், அங்கு கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 3 ஆயிரத்து 657 ஆக உயர்ந்துள்ளது.
வங்காளதேசத்தில் கொரோனாவில் இருந்து 1.58 லட்சத்துக்கும் அதிகமானோர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. உலகளவில் கொரோனா அதிகம் பாதித்த நாடுகளில் வங்காளதேசம் 16-வது இடத்தில் உள்ளது. அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.