அமெரிக்காவில் ஒரே நாளில் 47 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா பாதிப்பு
By: Karunakaran Mon, 10 Aug 2020 10:15:59 AM
சீனாவில் உள்ள வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் முதன் முதலாக கொரோனா வைரஸ் தோன்றியது. இந்த கொரோனா வைரஸ் தற்போது உலகின் 200க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா பரவலை தடுக்க பல்வேறு நாடுகள் ஊரடங்கு மற்றும் பல கட்டுப்பாடு நடவடிக்கைகளை அமல்படுத்தியுள்ளன.
கொரோனா வைரஸுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க பல்வேறு நாடுகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வந்தாலும், கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து கொண்டே வருகிறது. தற்போது உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 2 கோடியைத் தாண்டியுள்ளது.
உலகளவில் கொரோனா அதிகம் பாதித்த நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. தற்போது அமெரிக்காவில் ஒரே நாளில் 47 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 52 லட்சத்தை நெருங்கியுள்ளது.
மேலும் அமெரிக்காவில் ஒரே நாளில் 525 பேர் கொரோனா வுக்கு உயிரிழந்துள்ளனர். இதனால் அங்கு கொரோனாவுக்கு சிக்கி பலியானோர் எண்ணிக்கை 1.65 லட்சத்தைக் கடந்துள்ளது. அமெரிக்காவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 26.50 லட்சத்தை நெருங்கியுள்ளது.