செங்கல்பட்டு மாவட்டத்தில் மேலும் 172 பேருக்கு கொரோனா உறுதி
By: Monisha Fri, 03 July 2020 11:06:48 AM
செங்கல்பட்டு மாவட்டத்தில் ஏற்கனவே 5,807 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில் இன்று மேலும் 172 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் கடும் தீவிரமாக பரவி வருகிறது. நேற்று புதிய உச்சமாக 4 ஆயிரத்து 343 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 98 ஆயிரத்து 392 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 41 ஆயிரத்து 47 பேர் தற்போது மாநிலம் முழுவதும் சிகிச்சையில் உள்ளனர். மேலும், கொரோனா பாதிப்பில் இருந்து 56 ஆயிரத்து 21 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். ஆனால், தமிழகத்தில் இதுவரை கொரோனா தாக்குதலால் 1,321 பேர் உயிரிழந்துள்ளனர்.
அதிகபட்சமாக சென்னையில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 62,598 ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில் கொரோனா பாதிப்பில் சென்னைக்கு அடுத்தபடியாக உள்ள செங்கல்பட்டு மாவட்டத்தில் ஏற்கனவே 5,807 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில் இன்று காலை நிலவரப்படி மேலும் 172 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,979 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 3,014 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 96 பேர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் செங்கல்பட்டு மாவட்டம் உட்பட 5 மாவட்டங்களில் நாளை மறுநாள் நள்ளிரவு வரை முழு ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது.