அரியலூர் மாவட்டத்தில் புதிதாக 27 பேருக்கு கொரோனா உறுதி
By: Monisha Thu, 17 Sept 2020 2:06:13 PM
அரியலூர் மாவட்டத்தில் புதிதாக 27 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளதால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3, 343 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 19 ஆயிரத்து 860 ஆக அதிகரித்துள்ளது. நோய் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் 46 ஆயிரத்து 633 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 4 லட்சத்து 64 ஆயிரத்து 668 ஆக அதிகரித்துள்ளது. ஆனாலும், கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 8 ஆயிரத்து 559 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் மற்ற மாவட்டங்களை விட சென்னையில் தான் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கையும் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே வருகிறது.
அரியலூர் மாவட்டத்தில் நேற்று 27 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் அரியலூர் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 7 பேருக்கும், அரியலூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட பகுதிகளில் 5 பேருக்கும், திருமானூர், செந்துறை ஆகிய ஒன்றியங்களுக்குட்பட்ட பகுதிகளில் தலா 2 பேருக்கும், தா.பழூர், ஆண்டிமடம் ஆகிய ஒன்றியங்களுக்குட்பட்ட பகுதிகளில் தலா ஒருவருக்கும், ஜெயங்கொண்டம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 3 பேருக்கும், ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட பகுதிகளில் 6 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதனால் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3, 343 ஆக உயர்ந்துள்ளது.
2,470 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். ஏற்கனவே மாவட்டத்தில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டு 37 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். தற்போது 836 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் 344 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை முடிவுகள் வரவேண்டியுள்ளது.