விருதுநகர் மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரிப்பு; இன்று 284 பேருக்கு கொரோனா உறுதி
By: Monisha Sat, 18 July 2020 5:29:14 PM
விருதுநகர் மாவட்டத்தில் ஏற்கனவே 3,295 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில் மேலும் 284 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் நோய் தொற்று தீவிரமாக பரவி வருகிறது. இதனால் மாநிலத்தில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 60 ஆயிரத்து 907 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தாக்குதலுக்கு தமிழகத்தில் இதுவரை 2,315 பேர் பலியாகியுள்ளனர்.
அதிகபட்சமாக சென்னையில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 83,377 ஆக அதிகரித்துள்ளது. சென்னையை தொடர்ந்து செங்கல்பட்டு, திருவள்ளூர், மதுரை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்த வண்ணம் உள்ளது.
இந்நிலையில், விருதுநகர் மாவட்டத்தில் நேற்று ஒரேநாளில் 273 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனையடுத்து சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பின்படி நேற்றுவரை விருதுநகரில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,295 ஆக இருந்தது.
இந்நிலையில் இன்றைய நிலவரப்படி இதுவரை விருதுநகர் மாவட்டத்தில் 284 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து பாதிப்பு எண்ணிக்கை தற்போது 3,379 ஆக அதிகரித்துள்ளது.
இன்று தொற்று உறுதியானவர்களில் 16 பேர் கர்ப்பிணிகள் மற்றும் 9 பேர் சுகாதார பணியாளர்கள் ஆவர். தற்போது 2,289 பேர் கொரோனா சிகிச்சை பெற்று வரும் நிலையில், இதுவரை 1,065 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். மாவட்டம் முழுவதும் இதுவரை 25 பேர் கொரோனா பதிப்பால் உயிரிழந்துள்ளனர்.