சிறப்பு அனுமதியோடு பிரிட்டனிலிருந்து நியூசிலாந்துக்கு வந்த 2 பேருக்கு கொரோனா உறுதி
By: Monisha Tue, 16 June 2020 4:37:46 PM
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவியவர்களிள் எண்ணிக்கை 80 லட்சத்தை தாண்டியுள்ளது. கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 80 லட்சத்து 73 ஆயிரத்து 626 ஆக உள்ளது. கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 34 லட்சத்து 57 ஆயிரத்து 263 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 41 லட்சத்து 78 ஆயிரத்து 877 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை 4 லட்சத்து 37 ஆயிரத்து 486 பேர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா வைரசால் அதிகம் பாதிக்கப்பட்ட அமெரிக்கா, ரஷ்யா, பிரேசில், இந்தியா, பிரிட்டன் ஆகிய நாடுகள் வைரஸிலிருந்து விடுபட முடியாமல் தவித்து வரும் நிலையில் நியூசிலாந்து சிறப்பான நடவடிக்கைகளைக் கையாண்டு கொரோனா வைரஸைக் கட்டுக்குள் கொண்டுவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து கடந்த வாரம் நியூசிலாந்து கொரோனா வைரஸ் இல்லாத நாடாக அறிவிக்கப்பட்டது.
நியூசிலாந்தில் எல்லைக் கட்டுப்பாடுகள் தொடர்ந்தாலும், சிறப்பு அனுமதிகள் இருந்தால் நியூசிலாந்துக்கு பிற நாடுகளிலிருந்து வர முடியும். இந்த நிலையில் பிரிட்டனிலிருந்து சிறப்பு அனுமதியோடு இருவர் வந்துள்ளனர். அவர்களுக்கு கொரோனா உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக நியூசிலாந்து அரசு தெரிவித்துள்ளது.
மேலும் உள்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் யாருக்கும் கொரோனா உறுதிப்படுத்தப்படவில்லை. நியூசிலாந்தில் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்தியதற்காக உலகம் முழுவதும் பரவலாகப் நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா பாராட்டப்பட்டார். நியூசிலாந்தில் மொத்தம் 1,506 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். 22 பேர் பலியாகி உள்ளனர்.