விழுப்புரத்தில் 5 காவலர்கள் உள்பட 74 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
By: Monisha Thu, 13 Aug 2020 12:38:44 PM
விழுப்புரம் மாவட்டத்தில் இன்று புதிதாக 5 காவலர்கள் உள்பட 74 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நேற்று புதிதாக 5 ஆயிரத்து 871 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 லட்சத்து 14 ஆயிரத்து 520 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2 லட்சத்து 56 ஆயிரத்து 313 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்த வண்ணம் உள்ளது. இருப்பினும் குணமடைவோரின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது.
மற்ற மாவட்டங்களை விட சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் மாவட்டங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நேற்று அதிகமாக உள்ளது.
இந்நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் இன்று 5 காவலர்கள் உள்பட 74 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனால் விழுப்புரம் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,811 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை கொரோனாவுக்கு சிகிச்சை பலனின்றி 46 பேர் உயிரிழந்துள்ளனர்.