விருதுநகர் மாவட்டத்தில் புதிதாக 191 பேருக்கு கொரோனா உறுதி
By: Monisha Mon, 10 Aug 2020 1:37:51 PM
விருதுநகர் மாவட்டத்தில் புதிதாக 191 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதால் பாதிப்பு எண்ணிக்கை 10,568 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா தாக்குதல் தென் மாவட்டங்களில் அதிகரித்து வருகிறது. நேற்று புதிதாக 5 ஆயிரத்து 994 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2 லட்சத்து 96 ஆயிரத்து 901 ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில், விருதுநகர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 191 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது. ராஜபாளையத்தில் 12 நூற்பாலை ஊழியர்கள் உள்பட 31 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் விருதுநகர் மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை 10,568 ஆக உயர்ந்துள்ளது.
நேற்று வெளியிடப்பட்ட மருத்துவ பரிசோதனை முடிவுகளில் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் கிராம பகுதிகளை சேர்ந்தவர்களாகவே உள்ளனர். கிராமப்பகுதிகளில் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த பஞ்சாயத்து அளவில் கண்காணிப்பு குழுக்களை அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இதுவரை இல்லாத அளவுக்கு நேற்று ஒரே நாளில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதையடுத்து மாவட்டத்தில் பலியானோர் எண்ணிக்கை 138 ஆக உயர்ந்துள்ளது.