விருதுநகர் மாவட்டத்தில் புதிதாக 50 பேருக்கு கொரோனா உறுதி
By: Monisha Thu, 17 Sept 2020 09:17:50 AM
விருதுநகர் மாவட்டத்தில் புதிதாக 50 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளதால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 14,741 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருகிறது. இருப்பினும் கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 19 ஆயிரத்து 860 ஆக அதிகரித்துள்ளது.
நோய் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் 46 ஆயிரத்து 633 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 4 லட்சத்து 64 ஆயிரத்து 668 ஆக அதிகரித்துள்ளது. ஆனாலும், கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 8 ஆயிரத்து 559 ஆக உயர்ந்துள்ளது.
மற்ற மாவட்டங்களை விட சென்னை, செங்கல்பட்டு, கோவை, கடலூர், திருவள்ளூர், திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
விருதுநகர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 50 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது. இதன் மூலம் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 14,741 ஆக உயர்ந்துள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 2 லட்சத்து 6,325 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்ததில் 14,691 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆனது. 4,900 பேரின் மருத்துவ பரிசோதனை முடிவுகள் இன்னும் தெரிவிக்கப்படவில்லை.
13,162 பேர் இதுவரை சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளனர். ஒரு சிறப்பு தனிமைப்படுத்தும் மையத்தில் 27 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர். வீடுகளில் 192 பேர் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் கிராமப்பகுதிகளிலேயே பெரும்பாலானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.