சிவகங்கையில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ்காரர் ஒருவருக்கு கொரோனா உறுதி
By: Monisha Sat, 27 June 2020 1:59:57 PM
தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 74,622 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு 41,357 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 957-ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 49,690 ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில், சிவகங்கை மாவட்டத்தில் நேற்று 33 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. சிவகங்கை நகராட்சி அலுவலகத்தில் உள்ள முதல் தளத்தில் உள்ள அறையில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளன. இந்த அறை முன்பு சுழற்சி முறையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ்காரர் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து சிவகங்கை நகராட்சி அலுவலகம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு அலுவலகத்திற்கு வரும் பணியாளர்கள் பரிசோதனைக்கு பின்னர் அனுமதிக்கப்பட்டனர்.
மேலும் சிவகங்கை மாவட்டத்தில் 32 பேருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர்கள் சிவகங்கை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். நேற்று 29 பேர் பூரண குணமடைந்தனர். அவர்களை மாவட்ட கலெக்டர் ஜெயகாந்தன், மருத்துவ கல்லூரி முதல்வர் ரெத்தினவேல் மற்றும் டாக்டர்கள் வாழ்த்தி அனுப்பி வைத்தனர்.