கலபுரகி மத்திய சிறையில் 10 கைதிகளுக்கு கொரோனா பாதிப்பு
By: Karunakaran Sat, 11 July 2020 5:53:17 PM
கர்நாடகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் தற்போது அதிகரித்து கொண்டே வருகிறது. தற்போது, பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா, துமகூரு மாவட்ட சிறையில் உள்ள கைதிகளுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. கலபுரகி மத்திய சிறையில் உள்ள கைதிகளுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
தற்போது கலபுரகி மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்த 10 கைதிகளுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சமீபத்தில் இந்த கைதிகள் 10 பேரும் பரோலில் சிறையில் இருந்து வெளியே சென்று திரும்பியவர்கள். இதனால், அவர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையில் 10 கைதிகளுக்கும் கொரோனா இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டது.
கொரோனா பாதிப்பு காரணமாக, கைதிகள் 10 பேரும் தற்போது ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். கைதிகளுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ள மத்திய சிறையில், அவர்கள் அடைக்கப்பட்டு இருந்த அறைகள் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு சுத்தம் செய்யப்பட்டது.
கைதிகள் 10 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், மற்ற கைதிகள் இடையே கொரோனா பீதி ஏற்பட்டுள்ளது. கர்நாடகத்தில் ஆரம்பத்தில் கட்டுக்குள் வந்த கொரோனா, தற்போது அங்கு மீண்டும் வேகமெடுத்துள்ளது.