மத்திய பாதுகாப்பு அமைச்சக செயலாளருக்கு கொரோனா பாதிப்பு
By: Nagaraj Thu, 04 June 2020 5:46:49 PM
மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் செயலாளர் அஜய் குமாருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. இதையடுத்து அவர் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இதுதொடர்பாக மத்திய அரசு வட்டாரங்கள் தரப்பில் தெரிவித்துள்ளதாவது:
டில்லி ரெய்சினா ஹில்ஸ் தெற்கு பிளாக் பகுதியில் மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் தலைமை அலுவலகம் உள்ளது. இதன் செயலாளர் அஜய்குமாருக்கு நேற்று உடல் பரிசோதனை நடத்தியதில் கொரோனா தொற்று உறுதியானது.
இதையடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலை சீராக உள்ளது. அஜய்குமாருடன் தொடர்பில் இருந்த மேலும் 35 அதிகாரிகளுக்கும் தனிமைப்படுத்தப்பட்டு கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீன எல்லை விவகாரம் தொடர்பாக மத்திய ராணுவ அமைச்சர் ராஜ்நாத்சிங் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் அஜய்குமாருடன் தொடர்பில் இருந்த சில அதிகாரிகளும் பங்கேற்றதால் முன்னெச்சரிக்கையாக அவர்களுக்கும் பரிசோதனை நடத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது