ஈரான் நாட்டில் கொரோனா பலி எண்ணிக்கை 13,211 ஆக அதிகரிப்பு
By: Monisha Wed, 15 July 2020 12:07:00 PM
சீனாவின் வுகான் நகரில் முதன் முதலில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 1.33 கோடியை தாண்டியுள்ளது. கொரோனா வைரஸ் தாக்குதலில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 5.78 லட்சத்தைக் கடந்துள்ளது.
இந்நிலையில் ஈரான் நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 179 பேர் கொரோனாவுக்கு பலியாகினர். இதனைத் தொடர்ந்து ஈரானில் கொரோனாவால் பலியானவர்கள் எண்ணிக்கை 13,211 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை ஈரானில் கொரோனாவால் 2,25,270 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், ஈரானில் 2 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் குணமடைந்துள்ளனர்.
முகக்கவசம் அணியாத ஈரானியர்களுக்கு அரசின் சேவைகள் மறுக்கப்படும் என்றும், சமூக இடைவெளியைப் பின்பற்றாத நிறுவனங்கள் ஒரு வாரம் மூடப்படும் என்றும் அதிபர் ஹசன் ரவ்ஹானி தெரிவித்துள்ளார்.
ஈரானின் புனித நகரமான கூமிலில் பிப்ரவரி மாதத்தில் முதல் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து வட பகுதியில் உள்ள சுற்றுலா நகரமான கிலான் கடுமையான பாதிப்புக்குள்ளானது. தற்போது ஈரானின் எல்லைப் பகுதியில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது.
ஈரான் தலைநகர் தெஹ்ரானில் 90 லட்சம் பேர் வசிக்கின்றனர். ஊரடங்குத் தளர்த்தப்பட்டதால் அங்கு மக்கள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. இதனால் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நோய் தொற்று எண்ணிக்கை மேலும் அதிகரித்தால் ஊரடங்குக் கட்டுப்பாடுகள் மீண்டும் கொண்டுவரப்படும் என்று தெஹ்ரான் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.